திருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சியில் சுகாதார ஆய்வாளராக பணியாற்றி வருபவர் வெங்கடாசலம் (50). நேற்றுமுன்தினம் பணி முடித்து வீட்டிற்கு சென்றபோது வீட்டருகே ராமர் மடத்தெருவை சேர்ந்த பாமக நகர செயலாளர் கல்விபிரியன் என்பவர் வெங்கடாசலத்தை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் காயமடைந்த வெங்கடாசலம் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருத்துறைப்பூண்டி போலீசார் விசாரணை நடத்தியதில், பழைய பேருந்து நிலையம் பகுதியில் மீன் விற்பனை செய்து வரும் கல்விபிரியன், மார்க்கெட் இடமாற்றத்திற்கு சுகாதார ஆய்வாளர்தான் காரணம் என்று நினைத்து வெட்டியது தெரியவந்தது.
கல்விபிரியனை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில், பாமக பிரமுகரை கைது செய்யாததை கண்டித்து நகராட்சியில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் 90 பேர் நேற்று காலை நகராட்சி முன் சமூக இடைவெளியை பின்பற்றி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.