×

குக்கரில் சாராயம் காய்ச்சியவர் கைது: 50 லிட்டர் ஊறல் பறிமுதல்

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த ராமந்தண்டலம் பகுதியில் வீட்டு மாடியில் சிலர் குக்கரில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக மாவட்ட எஸ்.பி. அரவிந்தனுக்கு தகவல் வந்தது.  அவர் மதுவிலக்கு அமல்பிரிவு டிஎஸ்பி கல்பனாதத்துக்கு தகவல் தெரிவித்தார். அவரது உத்தரவின்பேரில் திருவள்ளூர் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் நேற்று முன்தினம் இரவு ராமந்தண்டலம் பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, ஒரு வீட்டின் மாடியில் சிலர் சாராயம் காய்ச்சுவது தெரியவந்தது. போலீசாரை கண்டதும் சாராயம் காய்ச்சியவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். ஒருவர் மட்டும் போலீசாரிடம் சிக்கினார்.

 விசாரணையில், அவர் வீட்டின் உரிமையாளர் ஆரூன் (49) என்பது தெரிந்தது. அவரிடமிருந்து சாராயம் காய்ச்ச பயன்படுத்திய குக்கர் உட்பட மூலப்பொருட்கள், உபகரணங்கள் மற்றும் 50 லிட்டர் ஊறலையும் போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.


Tags : Booze, arrest, 50-liter soak
× RELATED சென்னையில் சைபர் கிரைம் போலீஸ் என மிரட்டி ரூ.13,000 பறிப்பு.!!