பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை சம்பாவ்னா சேத். பாலிவுட் படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்தும், ஒரு பாட்டுக்கு ஆடியும் வருகிறார். சம்பாவ்னாவுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது. தனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட காலத்தில் கொரோனா தொற்று இருக்கக்கூடும் என்பதாலும் தான் ஒரு நடிகை என்பதாலும் மருத்துவமனைகள் தன்னை பரிசோதிக்க மறுத்துவிட்டதாக கூறியுள்ளார். இதுபற்றி அவர் மேலும் கூறியிருப்பதாவது: எனக்கு பல ஆண்டுகளாக சைனஸ் மற்றும் சளி பிரச்சினை உள்ளது. இருமல், ஜலதோசம் வந்தால் ஓரிரு நாளில் சரியாகி விடும். இந்த முறை ஒரு வாரத்துக்கு மேல் சரியாகவில்லை. அதோடு புதிதாக காது வலியும் வந்தது.
ரத்த அழுத்தமும் குறைந்தது. இதனால் பரிசோதனை செய்து கொள்ள மருத்துவமனைக்கு சென்றேன். ஆனால் எந்த மருத்துவமனையிலும் என்னை அனுமதிக்க மறுத்துவிட்டனர். 7 மருத்துவமனைகளுக்கு நானும் என் கணவரும் சென்றோம். வாசலோடு திருப்பி அனுப்பிவிட்டனர். எப்படியாவது என்னை காப்பாற்றுங்கள் என் காது வலியையாவது குணப்படுத்துங்கள் என்று கெஞ்சினேன். எனக்கு கொரோனா தொற்று இருக்கும் என்று மருத்துவமனை வளாகத்திற்குள்கூட எங்களை விடவில்லை. சில மருத்துவமனைகளிலிருந்து நான் வெளியேற்றப்பட்டதற்கு நான் நடிகை என்பதும் காரணமாக இருந்தது. இறுதியில் ஒரு மருத்துவமனையில் என்னை சோதனை செய்தனர். காது தொற்றால் வந்த பிரச்சினை என்பதை கண்டுபிடித்து அதற்கான சிகிச்சை பெற்று வருகிறேன். நம் நாட்டில் மனிதாபிமானம் குறைந்த விட்டதாகவே கருதுகிறேன். என்றார்.