அவுரங்காபாத்: கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் தேசிய அளவிலான ஊரடங்கு வரும் 17ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாநிலங்களிலும் நூற்றுக்கணக்கான வெளிமாநில தொழிலாளர்கள் சிக்கி தவித்தனர். இந்நிலையில் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்வதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. இதற்காக சிராமிக் எனப்படும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது. மே 1ம் தேதி தொடங்கி கடந்த செவ்வாய்க்கிழமை வரை 83 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளது. சுமார் 80 ஆயிரம் தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடந்த 5 நாட்களில் சொந்த மாநிலங்களுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
இருப்பினும், வெளிமாநில தொழிலாளிகள் சிலர் நடந்து சொந்த ஊர் சென்ற வண்ணம் உள்ளனர். இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் அவுரங்காபாத்தில் ரயில் மோதிய விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். சத்தீஸ்கர் மாநிலத்துக்கு நடந்து சென்ற வெளி மாநில தொழிலாளர்கள் தூக்கம் காரணாமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் அவுரங்காபாத் கர்மத் அருகே தண்டவாளத்தில் தூங்கியுள்ளனர். இந்நிலையில், இன்று காலை 6.30 மணியளவில் அந்த தண்டவாளத்தில் சென்ற காலி சரக்கு ரயில் தூங்கிய கொண்டிருந்த 17 பேர் மீது ஏறியதில் அனைவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து அவுரங்காபாத் ரயல்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொரோனா பாதிப்பு ஒருபக்கம் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், தொழிலாளர்கள் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளது நாட்டு மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.