இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் பாதித்த 40 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 22,413ஆக அதிகரித்துள்ளது. பாகிஸ்தானின் தேசிய சுகாதார துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் கொரோனா பாதித்து 40 பேர் உயிரிழந்துள்ளனர். பஞ்சாப் மாகாணத்தில் 8,420 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது- சிந்து மாகாணத்தில் 8,189, கைபர் பக்துன்கா 3,499, பலுசிஸ்தான் 1,495, இஸ்லாமாபாத் 485, கில்கிட்-பால்திஸ்தான் 386 மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 76 பேரும் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 40 பேர் உயிரிழந்த நிலையில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கையானது 526ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் புதிதாக 1,049 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையானது 22,413 ஆக உயர்ந்துள்ளது. 6,217 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இதுவரை 2,32,582 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த திங்களன்று பேசிய பிரதமர் இம்ரான் கான் நாட்டில் படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்படும் என்றும் காலவரையற்ற ஊரடங்கு காரணமாக மக்கள் அச்சமடைய வேண்டாம் என்றும் கூறியிருந்தார்.