×

கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் ஆர்வம் காட்டாமல் மதுக்கடைகளை திறக்கும் அரசை கண்டித்து இன்று கருப்பு சின்னம் அணிந்து போராட்டம்:

* ஸ்டாலின், கூட்டணி தலைவர்கள் வேண்டுகோள்

சென்னை: மதுக்கடைகள் திறப்பதை கண்டித்து இன்று கருப்பு சின்னம் அணிந்து மக்கள் போராட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வெளியிட்ட அறிக்கை:  தமிழகத்தில் ஊரடங்கை அரசு படிப்படியாக ரத்து செய்து, அதன் வலிமையைக் குறைப்பது என்பது அப்பாவிப் பொதுமக்களை நட்டாற்றில் கைவிடுவதற்கு ஒப்பாகும். தினக் கூலித் தொழிலாளர்கள், சிறு - குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் முடங்கியதால் வேலை இழந்தோர் சிறு வணிகர்கள், இங்கிருக்கும் பிற மாநிலத் தொழிலாளர்கள் ஆகியோரின் பிரச்னைகளை முன்கூட்டியே எதிர்பார்த்து அவற்றுக்கான தீர்வுகள் மத்திய மாநில அரசுகளால் சிந்திக்கப்படவில்லை.

ஆனால்-ம் தேதி முதல், மதுபானக் கடைகளைத் திறப்பது என்று அரசு முடிவெடுத்துள்ளது. இந்த முடிவின் காரணமாக சமூகத் தொற்று மேலும் பரவலாகும் வாய்ப்பு அதிகம் என்பதால், அரசின் செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம். மார்ச் 24 முதல் தமிழகத்தில் ஊடரங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு நிற்கும் மக்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் வீதம் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால், இதுவரை வழங்கப்படவில்லை. தோராயமாக இதற்கு 3,850 கோடி ரூபாய் தேவைப்படும். இரண்டு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் ஆண்டு நிதிநிலை அறிக்கை தயாரிக்கும் அரசுக்கு இது சாத்தியமானதே ஆகும்.

கொரோனா நோய்த் தொற்றிலிருந்து மக்களைக் காக்க வேண்டிய மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையைச் சேர்ந்தவர்கள் பலரும் சரியான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாத நிலையில் தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகி வருகிறார்கள். முன்கள வீரர்களான அவர்களுக்குக் கூட பாதுகாப்பு உபகரணங்களை வழங்காத தமிழக அரசின் மெத்தனத்தைக் கண்டிக்கிறோம். கொரோனா நோய் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாமலும், தொற்றை எதிர்கொள்வதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை முறையாகச் செய்யாமலும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணம் - மீட்பு நடவடிக்கை - மறுவாழ்வு பற்றிக் கவலைப்படாமலும்,

திடீரென மதுபானக் கடைகளைத் திறப்பதில் மட்டும் ஆர்வத்துடன் செயல்படும் தமிழக அரசை கண்டிக்கும் வகையிலும் மாநில அரசு கோரிய நிதியை மத்திய அரசு வழங்காததை கண்டித்தும் மே 7-ம் தேதி ஒருநாள் மட்டும் கருப்புச் சின்னம் அணிவது என்றும் அன்று காலை 10 மணிக்கு அவரவர் இல்லத்தின் முன் ஐந்து பேருக்கு அதிகமாகாமல் பதினைந்து நிமிடங்கள் நின்று, “கொரோனாவை ஒழிப்பதில் தோல்வி அடைந்துவிட்ட அதிமுக அரசைக் கண்டிக்கிறோம்” என முழக்கமிட்டுக் கலைவதென்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், அதன் கூட்டணிக் கட்சித் தலைவவர்கள் கலந்து பேசி முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அலட்சியமும், ஆணவமும் கொண்ட தமிழக அரசுக்கு, கொரோனா நோய் தொற்று தமிழகத்தில் ஏற்படுத்தி வரும் பெரும் பாதிப்பை உணர்திடும் வகையில் தமிழக மக்கள் அனைவரும் கருப்புச் சின்னம் அணிந்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்திட வேண்டும். தமிழக மக்கள் அணியப் போகும் கருப்புச் சின்னம், அதிமுக அரசின் கண்களைத் திறக்கட்டும். இந்த அறிக்கையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திக தலைவர் வீரமணி, காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் முத்தரசன், இந்திய தேசிய முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொகைதீன், விசிக தலைவர் திருமாவளவன், மற்றும் மமக தலைவர் ஜவாஹிருல்லா, கொமதேக ஈஸ்வரன், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவிபச்சமுத்து ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.

Tags : state ,protest , Corona, Stalin, Coalition leaders
× RELATED மக்களவைத் தேர்தல்: கேரள மாநிலம்...