சென்னை: சென்னை நீங்கலாக தமிழகம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகின்றன. மது வாங்குவதற்கு வயதுவாரியாக நேரத்தையும் ஒதுக்கீடு செய்துள்ளனர். 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும், 40-50 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பிற்பகல் 1 மணி முதல் 3 மணி வரை, 40 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரை வயதுவாரியாக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆட்டையப் போட்ட கோடிகள்..: ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்த நாட்களில் டாஸ்மாக் கடைகளில் இருந்த மதுபானங்கள் குடோன்கள் மற்றும் திருமண மண்டபங்களில் இடம் மாற்றம் செய்யப்பட்டது. அப்போது அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மதுபானங்களை கையாடல் செய்ததாக புகார் எழுந்தது.
இதன்மூலம் மார்ச் 24ம் ேததிக்கு பிறகு ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகளில் மதுபானங்களின் இருப்பு பெருமளவில் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே தற்போது கடைகளை திறக்கும்பட்சத்தில் மதுபான விற்பனையில் பெரும் குளறுபடி ஏற்படும். எனவே மார்ச் 24ம் தேதி அன்றும் அதற்கு பிறகும் உள்ள மதுபானங்களின் இருப்புகளை கணக்கெடுத்த பிறகு ஒவ்வொரு கடைகளையும் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று ஊழியர்கள் கோரிக்கை வைத்தனர்.
நெல்லை, தூத்துக்குடியில் மட்டும் ரூ.20 கோடி சரக்குகளை அந்த மாவட்ட அதிகாரிகள் துணையுடன் ஆளும்கட்சியினர் எடுத்துச் சென்று பாளையங்கோட்டையில் உள்ள திருமண மண்டபத்தில் வைத்து விற்பனை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு போலீசாரும் உடந்தை என்று கூறப்படுகிறது. கடத்தப்பட்ட மதுபானங்கள் இரட்டிப்பு விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன. தற்போது மதுபானங்களின் விலை ஏற்றப்பட்டுள்ளதால், அதை எப்படி கணக்கு காட்டப் போகிறார்கள் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.