×

மத்திய அரசு அறிவிப்பு: ஜூலை 18ல் ஜேஇஇ 26ல் நீட் தேர்வுகள்: சிபிஎஸ்இ 10, 12 தேர்வுகள் பற்றி பின்னர் அறிவிப்பு

புதுடெல்லி: பொறியியல் படிப்புக்கான ஜேஇஇ முதன்மைத் தேர்வு ஜூலை 18 முதல் தொடங்கும் என்றும் மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத்  தேர்வு ஜூலை 26ல் நடைபெறும் என்றும் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு கடந்த மார்ச் 16ம் தேதி முதல் காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பல்கலைக்கழக மானியக் குழு கல்லூரி, பல்கலைக் கழகத் தேர்வுகள் ஜூலை மாத இறுதியில் நடைபெறும் என்றும் 2 மற்றும் 3ம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் ஆகஸ்ட் மாதமும் புதிய சேர்க்கை மாணவர்களுக்கான வகுப்புகள் செப்டம்பர் மாதமும் தொடங்க ஆலோசித்து வருவதாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில்,் பொது மருத்துவம், பல் மருத்துவம், சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய அளவிலான நீட் நுழைவுத் தேர்வு 3ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் நீட் உள்ளிட்ட தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டன. இந்நிலையில் தேர்வுகள் குறித்து மத்திய மனித வளத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ``நீட் தேர்வு ஜூலை 26ம் தேதியன்று நடைபெறும்.  ஜேஇஇ முதன்மைத் தேர்வுகள் ஜூலை 18 தொடங்கி 23ம் தேதி வரை நடைபெற உள்ளது. நிலுவையில் உள்ள சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான தேர்வுகள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.

ஆகஸ்ட் 1 முதல் கல்லூரி
அமைச்சர் கூறுகையில், ‘‘கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் திறப்பு, தேர்வுகள் குறித்து பல்கலை மானியக் குழு ஆய்வு செய்து பரிந்துரைத்திருந்தது. இதன் அடிப்படையில், ஆக.1ம் தேதி அனைத்து கல்லூரி, பல்கலைகளும் திறக்கப்படும் என்றும் புதிய மாணவர்களுக்கு செப்.1ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும்’’ என்றார்..



Tags : Central Government Announcement ,JEE 26 ,CBSE , Central Government, JEE, Neet exams, CBSE 10 and 12 exam
× RELATED திருப்புத்தூர் அருகே மவுண்ட் சீயோன்...