கடலூர்: பரிந்துரை கடிதம் பெற்ற பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், கடலூர் எம்பி வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். கடலூர் தொகுதி திமுக எம்பி டி.ஆர்.வி.எஸ். ரமேஷ் வீடு பண்ருட்டி போலீஸ் லைனில் அமைந்துள்ளது. இவரது வீட்டிற்கு கடந்த 27ம் தேதி வந்த பண்ருட்டியை சேர்ந்த பெண் தனக்கு கேன்சர் நோய் இருப்பதாகவும், அதற்கு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கான பரிந்துரை கடிதம் வேண்டும் என கேட்டுள்ளார்.
எம்பியும் உதவும் நல்லெண்ணத்தில் அவருக்கு பரிந்துரை கடிதம் கொடுத்த நிலையில் இரண்டு தினங்களுக்கு முன், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் கேன்சர் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்த பெண்ணிற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் அந்தப் பெண்ணின் மகன் மற்றும் மருமகள் மற்றும் உறவுக்காரப் பெண்ணுக்கும் கொரோனா இருப்பதை தொடர்ந்து பரிந்துரை கடிதம் கொடுத்த எம்பி வீட்டில் நோட்டீஸ் ஒட்டி பண்ருட்டி நகராட்சியினர் அவரை தனிமைப்படுத்தியுள்ளனர். அவருடைய ஓட்டுநர், உதவியாளர் என அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தி உள்ளனர்.