கமல்ஹாசனும், விஜய் சேதுபதியும் தலைவன் இருக்கிறான் என்ற படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். நேற்று இருவரும் இன்ஸ்ட்ராகிராமில் கலந்துரையாடினார்கள் அப்போது கமல்ஹாசன் அரசியலுக்கு தாமதாக வந்தது ஏன் என்பது குறித்து அளித்த விளக்கம் வருமாறு: உன்னுடைய எந்த சினிமாவில் அரசியல் இல்லை என்று நெருங்கிய நண்பர்கள் சொல்வார்கள். உற்றுக் கவனித்தால் அனைத்திலும் ஒரு கொட்டு இருக்கும். அடி இருக்கும். ஏதாச்சும் ஒன்று வைத்திருப்பேன். வறுமையின் நிறம் சிவப்பு காலத்திலிருந்து சொல்றேன். ரொம்ப தைரியமான சில கருத்துக்கள் எல்லாம் சொல்லியிருப்போம். சத்யா படத்தில் நேரடியாக அரசியலே பேசியிருப்போம்.
தேவர் மகன் படத்தில் சொல்லாமல் சொல்லியிருபோம். ஹே ராம் படம். காலம் செல்ல செல்ல அது இன்னும் தீவிரமான அரசியல் படமாக மாறிக் கொண்டிருக்கிறது. அரசியலுக்கு வருவதாக முன்பே சொல்லி இருந்தால், தடுப்பதற்கு நிறையப் பேர் இருப்பார்கள். அரசியலுக்கு வந்துவிடுவேனோ என்ற சந்தேகத்தில் வைக்கப்பட்ட இடைஞ்சல்கள் கணக்கில் அடங்காது. அதை மீண்டும் சொல்லிக்காட்ட விரும்பவில்லை. அரசியலுக்கு வருவதற்கான சூழல் வரவேண்டும். என்னை ‘இவன்’ வந்துட்டானா என்று சொல்லக்கூடாது. ‘இவர்’ என்று சொல்கிற வயது வரவேண்டும். அதற்காக காத்திருந்தேன். என்றார்.