×

மே 17 வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு: கடைகள், தொழிற்சாலைகளுக்கு அனுமதி: வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்தது தமிழக அரசு

சென்னை: மே 17 நள்ளிரவு 12 மணி வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. கடைகள், தொழிற்சாலைகள், ஐடி நிறுவனங்கள், கட்டுமான பணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறையே தொடரும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதேபோன்று, பள்ளி, கல்லூரி, பொது போக்குவரத்து, சுற்றுலாவுக்கு தொடர்ந்து தடை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சரவை கூட்டத்துக்கு பிறகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.  தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க கடந்த மார்ச் 24ம் தேதி முதல் மே மாதம் 3ம் தேதி (இன்று) வரை ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு குறையாததால் மேலும் 2 வாரத்துக்கு அதாவது மே 17ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. ஆனாலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படாத பச்சை மண்டலங்களில் 50 சதவீத பயணிகளுடன் பஸ்களை இயக்கலாம், குறைந்த ஊழியர்களை கொண்டு தொழிற்சாலைகள் இயங்கலாம், இரண்டு மற்றும் 4 சக்கர வாகனங்கள் செல்லலாம், கடைகள் திறக்கலாம் உள்ளிட்ட சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதே சலுகைகள் ஆரஞ்சு மண்டலங்களுக்கும் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட பகுதியில் தற்போதுள்ள ஊரடங்கு தொடரும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனாலும், தமிழக அரசு இதுபற்றி எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் இருந்தது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் நேற்று காலை 11 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை, தலைமை செயலகத்தில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அனைத்து அமைச்சர்கள், தலைமை செயலாளர் சண்முகம் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் மத்திய அரசு நேற்று முன்தினம் அறிவித்துள்ள ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் ஊரடங்கு தளர்த்தப்பட்ட பகுதிகளில்  எந்தெந்த பணிகளுக்கு அனுமதி கொடுக்கலாம் என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அமைச்சரவை கூட்டம் இரண்டரை மணி நேரம் நடைபெற்றது.

அமைச்சரவை கூட்டத்துக்கு பிறகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: மாநில பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு 4.5.2020 (நாளை) முதல் 17.5.2020 நள்ளிரவு 12 மணி வரை கீழ்க்காணும் வழிமுறைகளுடன் நீட்டிப்பு செய்யப்படுகிறது. அதன்படி,
• நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போது உள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும்.
சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கீழ்க்கண்ட பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது.
• கட்டுமான பணி நடைபெறும் இடத்திலேயே கட்டுமான தொழிலாளர்கள் இருக்கும் பட்சத்தில், அக்கட்டுமான பணிகள் அனுமதிக்கப்படும்.
•அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுமான பணிகள் மற்றும் சாலை பணிகள் அனுமதிக்கப்படும்.
•சிறப்பு பொருளாதார மண்டலங்கள், ஏற்றுமதி சார்ந்த தொழில் நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள் சென்னை மாநகராட்சி ஆணையர்/ மாவட்ட ஆட்சியர் ஆய்வுக்கு பின், சூழ்நிலைக்கேற்ப, 25 சதவிகித பணியாளர்களுடன் (குறைந்தது 20 பேர்) செயல்பட அனுமதிக்கப்படும். நிறுவனம் ஏற்பாடு செய்யும் வாகனங்களில் மட்டுமே பணியாளர்கள் வர வேண்டும்.
• தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் 10 சதவிகித பணியாளர்களை கொண்டு (குறைந்தது 20 பேர்) செயல்பட அனுமதிக்கப்படும். நிறுவனம் ஏற்பாடு செய்யும் வாகனங்களில் மட்டுமே பணியாளர்கள் வர வேண்டும்.
•அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
• அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் மின் வணிக நிறுவனங்கள் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட நேரங்களில் செயல்படலாம்.
• உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை, பார்சல் மட்டும் வழங்கலாம்.
•அனைத்து தனி கடைகள் (முடி திருத்தகங்கள்/ அழகு நிலையங்கள் தவிர), ஹார்டுவேர், சிமெண்ட், கட்டுமான பொருட்கள், சானிடரிவேர், எலெக்ட்ரிக்கல் பொருட்கள் விற்பனை செய்யும் தனிக் கடைகள், மொபைல் போன், கணிப்பொறி, வீட்டு உபயோக பொருட்கள், மின் மோட்டார், கண் கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்குதல் உள்ளிட்ட தனிக்கடைகள், காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
• பிளம்பர், எலெக்டிரிஷியன், ஏசி மெக்கானிக், தச்சர் உள்ளிட்ட சுயதிறன் பணியாளர்கள், சிறப்பு தேவைகள் உள்ளோருக்கான உதவியாளர்கள், வீட்டு வேலை பணியாளர்கள் ஆகியோர் சென்னை மாநகராட்சி ஆணையர் / சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் உரிய அனுமதி பெற்று பணிபுரிய அனுமதிக்கப்படுவர்.
சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதி தவிர, தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் (நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர) கீழ்க்கண்ட பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது:
• 50 சதவிகித பணியாளர்களை கொண்டு (குறைந்தபட்சம் 20 பேர்) மாநகராட்சி மற்றும் நகராட்சிக்கு வெளியிலுள்ள பகுதிகளில், அதாவது ஊரக மற்றும் பேரூராட்சி பகுதிகளில், உள்ள அனைத்து தொழிற்சாலைகள் (ஜவுளித்துறை உட்பட) செயல்பட அனுமதிக்கப்படும்.
•15,000-க்கும் மேற்பட்ட மக்கள் தொகை உள்ள பேரூராட்சிகளில் மட்டும், மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து, சூழ்நிலைக்கேற்ப, ஜவுளித்துறை நிறுவனங்களை 50 சதவிகித பணியாளர்களை கொண்டு செயல்பட அனுமதிக்கலாம்.
•SEZ, EOU தொழிற் நகரியங்கள், தொழிற்பேட்டைகள் (ஊரகம், நகரம்) 50 சதவிகித பணியாளர்களை கொண்டு செயல்பட அனுமதிக்கலாம். நகர பகுதிகளில் உள்ள தொழிற்பேட்டைகளில், ஜவுளித்துறை நிறுவனங்கள் இயங்க அனுமதி இல்லை.
• நகர பகுதிகளில் உள்ள ஏற்றுமதி நிறுவனங்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து சூழ்நிலைக்கேற்ப 50 சதவிகித பணியாளர்களை கொண்டு செயல்பட அனுமதிக்கப்படும்.
• மின்னணு வன்பொருள் உற்பத்தி 50 சதவிகித பணியாளர்களை கொண்டு செயல்பட அனுமதிக்கப்படும்.
• கிராமப்புறங்களில் உள்ள ஒருங்கிணைந்த நூற்பாலைகள் (ஷிப்ட் முறையில் தக்க சமூக இடைவெளியுடன்) 50 சதவிகித பணியாளர்களை கொண்டு செயல்பட அனுமதிக்கப்படும்.
• நகரப்பகுதிகளில் உள்ள தோல் பொருட்கள் மற்றும் ஆடை ஏற்றுமதிக்கான டிசைனிங் மற்றும் சாம்பிள்கள் உருவாக்கம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து, 30 சதவிகித பணியாளர்களை கொண்டு செயல்பட அனுமதிக்கப்படும்.
• தகவல் தொழில்நுட்பம் 50 சதவிகித பணியாளர்கள், குறைந்தபட்சம் 20 பேர்களை கொண்டு செயல்பட அனுமதிக்கப்படும்.
• நகர்புறங்களில் கட்டுமான பணிகள், பணியிடத்திலேயே பணியாளர்கள் இருந்தால் மட்டும் அனுமதிக்கப்படும். பணியாளர்களை ஒருமுறை மட்டும் வேறு இடத்தில் இருந்து அழைத்துவர அனுமதிக்கப்படும்.
• அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுமான பணிகள் மற்றும் சாலை பணிகள் அனுமதிக்கப்படும்.
• பிளம்பர், எலெக்ரிஷியன், ஏசி மெக்கானிக், தச்சர் உள்ளிட்ட சுயதிறன் பணியாளர்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியரிடம் உரிய அனுமதி பெற்ற பின்னர் அனுமதிக்கப்படுவர்.
• மாற்றுத்திறனாளிகள், முதியோர், நோயாளிகள் ஆகியோரின் சிறப்பு தேவைகளுக்கான உதவியாளர்கள், வீட்டு வேலை பணியாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் உரிய அனுமதி பெற்று பணிபுரிய அனுமதிக்கப்படுவர்.
• அச்சகங்கள் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
• கட்டுமான பணிகளுக்கு தேவையான ஹார்டுவேர், சிமெண்ட், கட்டுமான பொருட்கள், சானிடரிவேர், மின் சாதன விற்பனை கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும். கட்டுமான பொருட்களை எடுத்துச் செல்ல எந்தவித தடையும் இல்லை.
• மொபைல் போன், கணிப்பொறி, வீட்டு உபயோக பொருட்கள், மின் மோட்டார் ரிப்பேர், கண் கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்குதல் உள்ளிட்ட அனைத்து தனிக்கடைகள், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.
• கிராமப்புறங்களில் உள்ள அனைத்து தனி கடைகள், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்பபடும்.
•உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் மட்டும் வழங்கலாம். மின் வணிக நிறுவனங்கள் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டவாறு செயல்படலாம்.
• நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் உள்ள மால்கள் மற்றும் வணிக வளாகங்கள் தவிர்த்து, அனைத்து தனி கடைகள், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட மாவட்ட கலெக்டர்கள் சூழ்நிலைக்கேற்ப அனுமதிக்கலாம். அனைத்து மாவட்ட ஆட்சியர்களும், மாநகராட்சி ஆணையர்களும் அரசால் அறிவுறுத்தப்பட்ட தனிநபர் இடைவெளியினை பின்பற்றியும், போதுமான கிருமி நாசினிகளை பயன்படுத்தியும், பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்பாக பணிபுரிவதை கண்காணிக்கவும், அரசால் வெளியிடப்பட்டுள்ள நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை தீவிரமாக கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும். ஊரடங்கு உத்தரவு தொடர்வதால், பொது இடங்களில், 5 பேருக்கு மேல் மக்கள் கூடாமல் இருப்பதை கண்காணிக்க வேண்டும்.

ஏற்கனவே அரசால் அனுமதிக்கப்பட்ட அனைத்து தளர்வுகளும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள வேளாண்மை பணிகள், வேளாண் சார்ந்த தொழில்கள், தொழில் மற்றும் வணிக செயல்பாடுகளும், மருத்துவ பணிகள் மற்றும் அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் துறைகள், வங்கிகள், அம்மா உணவகங்கள், ஏடிஎம், ஆதரவற்றோர் இல்லங்கள் ஆகியவை எவ்வித தங்குதடையின்றி தொடர்ந்து முழுமையாக செயல்படலாம். கனிமம் மற்றும் சுரங்க பணிகள், கட்டுமான பணிகளுக்கு தேவையான பொருட்களை வழங்கும் செங்கல் சூளைகள், கல் குவாரிகள், எம்-சாண்ட், கிரஷர்கள் மற்றும் இவற்றிற்கான போக்குவரத்து ஆகியன செயல்படலாம்.

பெரும் தொழிற்சாலைகளும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும், கட்டுமான பணிகளுக்கும், பணிகளை தொடங்க மாவட்ட ஆட்சியர்/பெருநகர சென்னை மாநகராட்சி ஆகியோரிடம் இணைய வழியில் விண்ணப்பித்து பணியாளர் மற்றும் வாகனங்களுக்கு அனுமதி சீட்டுகள் பெற வேண்டும். நகர பகுதிகளில் பணியாளர்களை நிறுவனங்கள், தாங்கள் இயக்கும் பிரத்யேக பேருந்துகள் / வேன்கள் மூலம் பணிக்கு அழைத்து வரலாம். அந்த வாகனங்களில் 50 சதவிகிதம் அளவிற்கு மட்டுமே தனிநபர் இடைவெளியை கடைபிடித்து, பணியாளர்களை அழைத்து வர வேண்டும்.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், கிராமப்புற தொழில்கள், தனி கடைகள் ஆகியவை செயல்பட தனி அனுமதி தேவையில்லை. மத்திய அரசு மற்றும் மாநில அரசு அலுவலகங்கள், 33 சதவிகித பணியாளர்களுடன் தொடர்ந்து செயல்படும். ஏற்கனவே நடைமுறையில் உள்ள கீழ்க்காணும் செயல்பாடுகளுக்கான தடைகள், மறு உத்தரவு வரும்வரை தொடர்ந்து அமலில் இருக்கும்:

•பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்கள்.
• வழிபாட்டு தலங்களில் பொதுமக்கள் வழிபாடு மற்றும் அனைத்து மதம் சார்ந்த கூட்டங்கள்.
• திரையரங்குகள், கேளிக்கை கூடங்கள், மதுக்கூடங்கள், உடற்பயிற்சி கூடங்கள், கடற்கரை, சுற்றுலாத் தலங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், நீச்சல் குளங்கள், விளையாட்டு அரங்குகள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள் போன்ற இடங்கள்.
• அனைத்து வகையான சமய, சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாச்சார நிகழ்வுகள், விழாக்கள், கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள்.
• பொதுமக்களுக்கான விமான, ரயில், பொது பேருந்து போக்குவரத்து.
• டாக்ஸி, ஆட்டோ, சைக்கிள் ரிக்ஷா.
• மெட்ரோ ரயில், மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்து.
• மாநிலங்களுக்கு இடையேயான பொதுமக்கள் போக்குவரத்து.
• தங்கும் விடுதிகள் (பணியாளர் விடுதிகள் தவிர), தங்கும் ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள்.
• இறுதி ஊர்வலங்களில் 20 பேருக்கு மேல் பங்கேற்க கூடாது.
• திருமண நிகழ்ச்சிகளுக்கு, தற்போது உள்ள நடைமுறைகள் தொடரும்.

அரசு வழங்கியுள்ள இந்த நடைமுறைகளை பின்பற்றி, மாவட்ட கலெக்டர்கள்/ சென்னை மாநகர ஆணையர் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து, தொழிற்சாலைகளுக்கு தக்க அனுமதி வழங்கி, வருகிற 6ம் தேதி முதல் தொழிற்சாலைகள்செயல்பட நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நோய் தொற்றின் பரவலை தமிழக அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. நோய் தொற்று குறைய குறைய, அரசு மேலும் பல தளர்வுகளை அறிவிக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

233 தெருக்களுக்கு சீல்
சென்னையில் உள்ள 15 மண்டலங்களி–்ல 200 வார்டுகள் உள்ளன. நகரில் கொரோனாவால் நேற்று மட்டும் 174 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 1257 பேர் நகரில் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் தங்கியுள்ள தெருக்கள் சீல் வைக்கப்பட்டன. பொதுமக்கள் யாரும் அந்த தெருவில் இருந்து வெளியில் வர முடியாமலும், யாரும் உள்ளே செல்ல முடியாமலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். நகரில் 233 தெருக்கள் அவ்வாறு முடக்கப்பட்டுள்ளன. தமிழக அரசு அறிவித்துள்ள தளர்வுகள் இந்த பகுதிகளுக்கு மட்டும் பொருந்தாது.

நோய் கட்டுப்பாட்டு பகுதியில் தளர்வு இல்லை
தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: நோய் தடுப்பு பகுதிகளில் எந்த தளர்வும் வழங்கப்படவில்லை. நோய் தொற்றின் அளவு மற்றும் தன்மை அடிப்படையில், மத்திய அரசால் மாவட்டங்கள் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என வகைப்பாடு செய்யப்பட்டு, அதற்கு ஏற்றார்போல தளர்வுகளை அனுமதித்துள்ளது. இதன்படி, சிவப்புமாவட்ட பகுதிகளுக்கும் சில தளர்வுகளை மத்திய அரசு வழங்கியுள்ளது. எனவே, நோய் தடுப்பு பகுதிகள் தவிர, மற்ற பகுதிகளில் பச்சை, ஆரஞ்சு சிவப்பு நிற மாவட்ட பகுதிகளுக்கு மத்திய அரசால் அனுமதிக்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு உட்பட்டு, தொழிற்சாலைகள் தொடங்குவது உள்ளிட்ட பல தளர்வுகளை மாநில அரசு அறிவித்துள்ளது.

இந்த தளர்வுகள் மத்தியஅரசு அனுமதித்துள்ள தளர்வுகளுக்கு உட்பட்டே எல்லா பகுதிகளுக்கும் பொருந்தும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி காவல் கண்காணிப்பு எல்லைகளுக்கு மட்டும், அமைச்சரவை கூட்ட முடிவின்படி ஏற்கனவே முதல்வர் தெரிவித்தபடி அதிக தளர்வுகள் வழங்கப்படவில்லை. எனவே, இந்த தளர்வுகள் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என மாவட்ட நிற வகைப்பாடுகள் இன்றி அனைத்திற்கும் பொருந்தும் வகையில் முடிவு செய்யப்பட்டுள்ளது. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் மட்டும் எந்த தளர்வும் வழங்கப்படவில்லை என தெளிவுபடுத்தப்படுகிறது.



Tags : shops ,factories ,government ,Tamil Nadu , Curfew Extension, Shops, Factories, Corona, Govt
× RELATED சிவகாசியில் விதிமீறிய 24 பட்டாசு ஆலைகள் மூடல்