தாராபுரம்: தாராபுரம் அருகே குஜராத் மாநிலத்தில் இருந்து திரும்பியவர் கிராமத்திற்குள் தங்கியதால் தங்களுக்கும் கொேரானா பரவும் என்ற பீதியால் ஊரை விட்டு வெளியேறிய பொதுமக்கள் மரத்தடியில் தஞ்சமடைந்தனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த புளியம்பட்டி கிராமத்தை சேர்ந்த ஒருவர் குஜராத்தில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றில் கடந்த 6 மாதங்களாக வேலை செய்து வந்துள்ளார். ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து அங்கிருந்து தப்பிவந்த அவர், நேற்று முன்தினம் நள்ளிரவு அவரது வீட்டில் தங்கியுள்ளார். இவர் கிராமத்துக்குள் வரும் தகவல் அறிந்த அவரது மனைவி மற்றும் மகள் கொேரானா அச்சம் காரணமாக அவர்களது உறவினர் வீட்டிற்கு சென்று தங்கியுள்ளனர்.
குஜராத்திலிருந்து கொரோனா தொற்றுடன் நிதி நிறுவன ஊழியர் ஊருக்குள் புகுந்துள்ளதாக தகவல் கிராமத்தில் பரவியது. இதுகுறித்து சுகாதாரத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு கிராம மக்கள் தகவல் அளித்தும், அந்த நபரை பரிசோதனை செய்ய மருத்துவத்துறையினர் யாரும் வராததால், அதிருப்தியடைந்த கிராம மக்கள் கொரோனா தொற்று பரவி விடுமோ என்ற அச்சத்தில், தங்களது வீடுகளை விட்டு வெளியேறி சாலையோரம் உள்ள கோயில் மரத்தடியில் தஞ்சமடைந்தனர். தகவல் அறிந்த மாம்பாடி பஞ்சாயத்து ஊழியர்கள் குஜராத்தில் இருந்த வந்த நபர் தங்கியுள்ள வீட்டின் முன் கொேரானா தொற்று உள்ள வீடு என்ற ஸ்டிக்கர் ஒட்டி, கிருமி நாசினி தெளித்து சென்றனர்.
இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், அந்த நபரை தனிமைப்படுத்தி, கொரோனா தொற்று இருக்கிறதா இல்லையா என பரிசோதனை செய்து, நோய் தொற்று இல்லை என்று பரிசோதனை முடிவு வந்த பின்புதான் அவரை ஊருக்குள் அனுமதிப்போம். மேலும் அதிகாரிகள் வரும் வரை ஊருக்குள் செல்ல மாட்டோம், என்றனர். இதைத்தொடர்ந்து மரத்தடியில் தங்கியிருந்த கிராம மக்கள் மருத்துவர் குழுவினரை எதிர்பார்த்து காத்திருந்தனர்.