புதுடெல்லி: புகைப்பிடிப்பவர்களுக்கு கொரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக ஜோத்பூர் ஐஐடி விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. கொரோனா தொற்றில் நரம்பியல்’ என்பது பற்றிய ஆய்வை ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் ஐஐடி விஞ்ஞானிகள் மேற்கொண்டனர். இது தொடர்பான கட்டுரையை அமெரிக்க ரசாயன கூட்டமைப்பினர் சர்வதேச இதழ் ஒன்றில் வெளியிட்டுள்ளனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் நுகரும் சக்தியை இழப்பதுடன், சுவைத்து அறியும் தன்மையையும் இழக்கின்றனர். மூக்கும் வாயும் கொரோனா வைரஸ் நுழையும் முக்கியமான பாதை என்பதால் புகைப்பிடிப்பதால் ஏற்படும் சளி கொரோனா தொற்றை அதிகரிக்கும். மூக்கும் வாயும் நரம்பு மண்டலம் மற்றும் மூளையுடன் தொடர்புள்ளது என்பதால் இந்த தொற்று புகுந்து அவை செயல்படுவதை தடை செய்கிறது.
மேலும் புகைப்பிடிப்பதால் கொரோனா தொற்று தீவிரமாகிறது. கொரோனா நோயாளிகளில் புகைபிடிப்பவர்கள் மற்றும் பிடிக்காதவர்கள் என வகைப்படுத்தி வயது மற்றும் அவர்களுக்கு உள்ள பிறநோய்கள் அடிப்படையில் நடத்தப்பட்ட ஆய்வில் கூடுதல் அபாயம் உள்ளவர்களாக புகைப்பிடிப்பவர்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக்கு தலைமை தாங்கிய ஐஐடி பேராசிரியர் சுர்ஜித் கோஷ் கூறுகையில், `‘கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் புகைப்பிடிப்பவர்களாக இருந்தால் அவர்களது நரம்பு மண்டலத்தில் பரவும் தொற்றின் தன்மை தீவிரமாகும்’’ என தெரிவித்தார்.