×

கொரோனா பாதித்த பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ரோபோ: சென்னை காவல்துறை அறிமுகம்

சென்னை: கொரோனா பாதித்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட போலீசாருக்கு பதில் முதல்முறையாக  ரோபோ பயன்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் கொரோனா பாதித்த பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 4 உதவி ஆய்வாளர்கள், 3 தலைமை காவலர்கள், 3 காவலர்கள், ஒரு ஊர்க்காவல் படை வீரர், 4 தீயணைப்பு வீரர்கள் என மொத்தம் 15 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது போலீசாரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கொரோனா பாதித்த பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட போலீசாருக்கு பதில் ரோபோவை பயன்படுத்த சென்னை மாநகர காவல்துறை முடிவு செய்தது. அதன்படி, தனியார் நிறுவன உதவியுடன் 4 சக்கரம் பொருத்தப்பட்ட ரோபோ உருவாக்கப்பட்டது. இந்த ரோபோ கொரோனாவால் பாதிக்கப்பட்ட  பகுதிகளில் மக்கள் யாரும் வெளியே வராதபடி பாதுகாப்பு பணியில் ஈடுபடும்.

இந்த ரோபோவை பொறியாளர் ஒருவர் 100 மீட்டர் தொலையில் இருந்து இயக்குவார். உயர் அதிகாரிகள் பேசுவது ரோபோவில் பொருத்தப்பட்டுள்ள ஒலிப்பெருக்கி மூலம் மக்களுக்கு அறிவிக்கப்படு–்ம. ரோபோவில் 360 டிகிரி சுழலக்கூடிய வகையில் சிசிடிவி கேமரா ஒன்று பொருத்தப்பட்டுள்ளது.
தடையை மீறி வெளியே வரும் நபர்களை  இதன் மூலம் படம் பிடித்து கட்டுப்பாட்டு அறைக்கு ரோபோ அனுப்பும். அதன்படி போலீசார் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்வார்கள். இந்த ரோபோவை முதல்முறையாக சென்னை கிழக்கு மண்டலம், புதுப்பேட்டையில்  கொரோனா பாதிக்கப்பட்ட  பகுதியில் நேற்று தெற்கு மண்டல கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சிங்கா மற்றும் இணை கமிஷனர் சுதாகர் ஆகியோர் அறிமுகம் செய்து வைத்தனர்.

முதற்கட்டமாக, சிந்தாதிரிப்பேட்டை, புதுப்பேட்டை மற்றும் ராயப்பேட்டை பகுதிகளில் உள்ள தடை செய்யப்பட்ட இடங்களில் இந்த ரோபோ பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இந்த ரோபோவின் பயன்பாட்டை பொறுத்து, சென்னை மாநகரம் முழுவதும் கொரோனாவால் தடை செய்யப்பட்ட பகுதியில் பயன்படுத்த சென்னை மாநகர காவல் துறை முடிவு செய்துள்ளது.

காவலருக்கு கொரோனா
பரங்கிமலை கன்டோன்மென்ட் பகுதிக்கு உட்பட்ட நசரத்புரத்தில் வாடகைக்கு குடியிருக்கும் 15 ஆயுதப்படை காவலர்களுக்கு ரத்த பரிசோதனை செய்தபோது, அதில் ஒவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, நசரத்புரத்தில் 11 பேருக்கும், பெருமாள் கோயில் தெருவில் 2 பேருக்கும் என இதுவரை 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.



Tags : Chennai ,areas ,Introduction ,Corona , Corona, Defense Service, Robot, Madras Police
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்களில்...