குன்னூர்: குன்னூர் அருகே தன்னார்வ அமைப்பு வாலிபர்கள் பழங்களில் ஓவியம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் பொது மக்கள் வெளியே நடமாடுவதை தடுக்க போலீசார் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். ட்ரோன் கேமரா மூலம் பொது மக்கள் நடமாட்டத்தை கண்காணிப்பது, பல்வேறு விதங்களில் தண்டனை வழங்குவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சாலையில் படங்களை வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது ட்ரென்டிங்க் ஆகியது.
அதன்படி குன்னூரில் சமூக பணியில் ஈடுபட்டு வரும் கன்சர்வ் எர்த் பவுண்டேஷன் இளைஞர்கள் பஸ் நிலையம் அருகே சாலையில் பிரம்மாண்டமான ஓவியம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தற்போது அண்ணா சிலை அருகே தர்பூசணி பழங்களை கொண்டு அவற்றின் மீது மாவட்ட கலெக்டரின் உருவத்தை ஓவியமாக வரைந்துள்ளனர். இதேபோல் நகராட்சி நிர்வாகம் முத்திரை, காவல்துறையினர், மருத்துவர்கள் போன்ற ஓவியங்கள் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.