அலகாபாத்: மும்பையில் இருந்து அலகாபாத் செல்வதற்காக வெங்காய வியாபாரியாக ஒருவர் மாறிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. மும்பை விமான நிலையத்தில் வேலை செய்து வந்தவர் பிரேம் மூர்த்தி பாண்டே. இவர் முதல்கட்ட ஊரடங்கு காலத்தை மும்பையிலேயே கழித்துள்ளார். ஊரடங்கு மேலும் நீடிக்ககூடும் என்பதால் அச்சமடைந்த பிரேம் எப்படியாவது தனது சொந்த ஊரான உத்தரப் பிரதேச மாநிலம் அலகாபாத் செல்ல வேண்டும் என திட்டமிட்டார். பஸ் மற்றும் ரயில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ள நிலையில் ஊருக்கு செல்வது எப்படி என்பது குறித்து அவர் சிந்தித்தார். அப்போது காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளதை பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்தார்.
இதனைத் தொடர்ந்து 200 கி.மீ. தூரத்தில் நாசிக் அருகே உள்ள பிம்பல்கானுக்கு செல்ல மினிலாரியை வாடகைக்கு எடுத்தார். அங்கு 10 ஆயிரத்துக்கு தர்பூசணி பழங்களை லாரியில் ஏற்றினார். அங்கிருந்து மும்பை வந்தடைந்தார். இதற்காக அங்குள்ள வியாபாரி ஒருவருடன் அவர் ஏற்கனவே ஒப்பந்தம் செய்திருந்தார். பின்னர் மீண்டும் பிம்பல்கான் சந்தைக்கு சென்ற அவர், கிலோ ₹9.10 என்ற விலையில் 25,520 கிலோ வெங்காயத்தை கொள்முதல் செய்தார். இதற்காக 2.32 லட்சத்தை அவர் செலவு செய்தார். பின்னர் 20ம் தேதி அவர் 77,500க்கு லாரி ஒன்றை வாடகைக்கு எடுத்து வெங்காயத்தை ஏற்றிக்கொண்டு 1200 கி.மீ. தொலைவில் உள்ள தனது சொந்த ஊரான அலகாபாத் நோக்கி பயணத்தை தொடங்கினார்.
23ம் தேதி அலகாபாத் வந்த அவர், முண்டேரா சந்தையில் வெங்காயத்தை விற்பனை செய்வதற்காக சென்றார். ஆனால் துரதிஷ்டவசமாக அங்கு வெங்காயத்தை வாங்குவதற்கு வியாபாரிகள் யாரும் முன்வரவில்லை. எனவே தனது சொந்த கிராமமான கோட்வா முபார்க்பூருக்கு ஒரு சில கிலோ மீட்டர் தொலைவில் லாரியை நிறுத்தி வைத்துள்ளார். வெங்காயம் லாரியில் இருந்து இன்னும் இறக்கப்படவில்லை. தற்போது மத்தியப் பிரதேசத்தில் இருந்து வந்துள்ள வெங்காயம் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், அவை விற்று தீர்ந்த பின்னர் வியாபாரிகள் நாசிக் வெங்காயத்தை வாங்குவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.