×

திருமுல்லைவாயலில் பரபரப்பு இடிதாக்கியதில் வீட்டின் போர்டிகோ உடைந்தது: 2 கார்கள் சேதம்

ஆவடி: ஆவடி அடுத்த திருமுல்லைவாயல், சாந்திபுரம், 4வது தெருவில் உள்ள வீட்டில் மேல்தளத்தில் வசிப்பவர் அனிதா பிலோமினா (42). இவரது கணவர் ஜோஹன்சன். தனியார் கப்பல் நிறுவனத்தில்  இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதியினருக்கு 15 மாதத்தில் ஒரு கைக்குழந்தை உள்ளது. கணவர், கப்பலில் வேலை செய்வதால், அனிதா தனது உறவினருடன் மேற்கண்ட வீட்டில் வாடகைக்கு வசித்து வருகிறார். மேலும், வீட்டின் கீழ்தளத்தில் டாக்டர் ஜெயலட்சுமி என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.இதற்கிடையில் நேற்று முன்தினம் இரவு இவர்கள் இருவரது கார்கள் வீட்டு  போர்டிகோவில் நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று அதிகாலை 5.30 மணியளவில் சூறாவளி காற்று, இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது திடீரென்று பலத்த சத்தத்துடன் வீட்டின் மீது இடி தாக்கியது. இதில், வீட்டின்  போர்டிகோ இடிந்து கீழே விழுந்தது.

இந்த இடிபாடுகளுக்கிடையே அனிதா கார் முழுவதும் சிக்கி அப்பளமாக நொறுங்கியது மேலும், டாக்டர் ஜெயலட்சுமியின் காரின் முன்பகுதியும் சேதமடைந்தது.
இச்சம்பவத்தின் போது இரு குடும்பத்தினரும் வீட்டுக்குள்ளேயே இருந்தால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதன்பிறகு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து இடிபாடுகளை அப்புறப்படுத்தினர். இதுகுறித்து திருமுல்லைவாயல் காவல் நிலையத்திற்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து, போலீசார் அவர்களிடம் முழு ஊரடங்கு முடிந்த பிறகு நேரில் வந்து புகார் அளிக்கலாம் என்று தெரிவித்தனர். பலத்த மழையால் இடிவிழுந்து கார்கள் சேதமானது திருமுல்லைவாயல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : thunderstorm ,House of Portico ,Tirumalavaiyavalai , House , Portico smashed , thunderstorm, Tirumalavaiyavalai, 2 cars damaged
× RELATED 7 மாதத்திற்கு பிறகு தர்மபுரியில் இடியுடன் கூடிய சாரல் மழை