புதுடெல்லி: ’’மத்திய அரசு ஊழியர்கள், ஆயுதப்படை வீரர்களுக்கு அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு நிறுத்தி வைத்து உத்தரவிட்டது தேவையற்றது’’ என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் முன்னாள் தலைவர ்ராகுல் கண்டனம் தெரிவித்துள்ளனர்.கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, சுமார் 1.1 கோடி மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அறிவித்த அகவிலைப்படி உயர்வை அடுத்த ஆண்டு ஜூலை மாதம் வரை நிறுத்தி வைப்பதாக மத்திய நிதி அமைச்சகம் அறிவித்தது. இதற்கு காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக, கான்பரன்ஸ் அழைப்பில் பங்கேற்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்த கருத்தை காங்கிரஸ் கட்சி தனது டிவிட்டர் பதிவில் நேற்று வெளியிட்டது.
அதில் அவர், ‘‘அகவிலைப்படி உயர்வு நிறுத்தப்பட்ட மக்களுக்கு ஆதரவாக நாம் துணை நிற்க வேண்டும். இப்படிப்பட்ட சூழலில், அரசு ஊழியர்கள், ஆயுதப் படை வீரர்கள் மீது கடினமான சுமையை சுமத்துவது தேவையற்றது என்றே நான் கருதுகிறேன்’’ என்றார். அகவிலைப்படி உயர்வு நிறுத்தியது மனிதாபிமானமற்ற செயல் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஏற்கனவே கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், கான்பரன்ஸ் அழைப்பில் பங்கேற்ற அவர் கூறுகையில், ‘‘நடுத்தர வர்க்கத்திடமிருந்து பணத்தை எடுத்துக் கொள்வீர்கள். ஏழைகளுக்கும் பணத்தை தரமாட்டீர்கள். ஆனால், உங்களின் அலங்கார திட்டங்களுக்கு மட்டும் பணத்தை செலவழிப்பீர்கள்’’ என மத்திய அரசை விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பேசுகையில், ‘‘மக்களின் அகவிலைப்படியில் கை வைப்பதற்கு முன்பாக, முதலில் புல்லட் ரயில், புதிய நாடாளுமன்ற கட்டிடம் போன்ற தனது செலவுகளை அரசு நிறுத்த முன்வர வேண்டும்’’ என்றார். கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா பேசுகையில், ‘‘புதிய நாடாளுமன்ற கட்டிடம், அமைச்சர்களுக்கான புதிய பங்களா, பிரதமருக்கு புதிய வீடு போன்ற செலவுகளை நிறுத்தினாலே ரூ.2 - 2.5 லட்சம் கோடி வரை மிச்சப்படுத்தலாம்’’ என்றார். கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறுகையில், ‘‘அகவிலைப்படி உயர்வு நிறுத்தியதால் பாதிக்கப்படும் அரசு பணியாளர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்’’ என்றார்.