சென்னை: உயர் நீதிமன்ற கோடை விடுமுறை, விசாரணை முறை குறித்து முடிவெடுக்க அனைத்து நீதிபதிகளும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தவுள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளது. இதையடுத்து, நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறிவிடக்கூடாது என்பதற்காக தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதையடுத்து, உயர் நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து நீதிமன்ற பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளன. முக்கிய வழக்குகள் மட்டும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரிக்கப்பட்டு வருகிறது. வரும் மே 3ம் தேதிவரை ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான மே 2 முதல் தொடங்கும் கோடை விடுமுறையை ரத்து செய்து உயர் நீதிமன்ற பதிவாளர் அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளார். மேலும், கோடை விடுமுறையில் நீதிமன்றங்கள் செயல்படும் என்றும் அறிவிப்பாணையில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் கோடை விடுமுறை ரத்து செய்ததை திரும்பப் பெறுமாறு வக்கீல் சங்கங்கள் தலைமை நீதிபதிக்கு கோரிக்கை வைத்தது.
இதற்கிடையே, கோடை விடுமுறை குறித்தும், அப்போது வழக்கு விசாரணையை எப்படி நடத்துவது என்பது குறித்தும் ஆலோசனை நடத்த உயர் நீதிமன்ற அனைத்து நீதிபதிகளும் வரும் 29 ம் தேதி ஆலோசனை நடத்தவுள்ளதாக தலைமை பதிவாளர் குமரப்பன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் நீதிபதிகள் அவரவர் வீடுகளிலிருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் கலந்துகொள்வார்கள் என்றும் தலைமை பதிவாளர் தெரிவித்துள்ளார்.