சென்னை: சீனாவில் உருவான கொரோனா வைரஸ் இந்தியா உட்பட 210 நாடுகளுக்கு மேலாக தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலக முழுவதும் நாளுக்கு நாள் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை உயர்ந்து கொண்டு வருகிறது. இதையடுத்து, அனைத்து நாடுகளும் கொரோனா வைரசில் இருந்து காத்துக்கொள்ள ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளன. இந்தியாவிலும் ஊரடங்கு உத்தரவு மே 3 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே, இந்தியளவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் 5-வது இடத்தில் உள்ளது. எனவே, மத்திய அரசு பல்வேறு தொழில்களுக்கு விதி விலக்கு அளிக்க பரிந்துரை செய்தும், தற்போதைய கட்டுப்பாடு தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் சென்னை தான் முதல் இடத்தில் உள்ளது. இதுவரை சென்னையில் கொரோனாவால் 373 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த வாகனத்தணிக்கையை தீவிரப்படுத்தவும் காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 14 மண்டலங்களில் கொரோனா பரவியது கண்டறியப்பட்டுள்ள நிலையில் கடைசி மண்டலமாக மணலியிலும் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னை உள்ள அனைத்து மண்டலங்களிலும் கொரோனா தனது ஆதிக்கத்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.