பால்கர்: மகாராஷ்டிராவில் காரில் வந்த 3 பேர் அடித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் முறையாக விசாரணை நடத்தாத இன்ஸ்பெக்டர், எஸ்ஐயை சஸ்பெண்ட் செய்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை கடந்த 16ம் தேதி, காரில் கடந்து சென்ற 3 பேரை அப்பகுதி மக்கள் மடக்கி நிறுத்தினர். திருடர்கள் எனக்கூறி, அந்த 3 பேரையும் கட்டையால் சரமாரியாக அடித்துக் கொலை செய்தனர். இதுபற்றி காசா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த்ராவ் காலே, எஸ்ஐ சுதிர் கட்டாரே தலைமையிலான போலீசார் விசாரித்தனர். அதில் காரில் வந்தவர்கள், மும்பை அருகேயுள்ள கண்டிவேலி பகுதியைச் சேர்ந்த சிக்னே மகராஜ் கல்பவ்ரூக்ஷகிரி (70), சுஷில்கிரி மகராஜ் (35), டிரைவர் நிலேஷ் தெல்கட் எனத் தெரியவந்தது. இவர்கள், குஜராத் மாநிலம் சூரத்தில் உறவினர் இறந்த துக்க நிகழ்ச்சிக்கு காரில் புறப்பட்டு வந்ததும் தெரிந்தது. திருடர்கள் என தவறாக கருதி தாக்குதல் நடத்தி கொலை செய்துள்ளனர். கொலையாளிகள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து பல்கர் மாவட்ட எஸ்பி கவுரவ்சிங் நேரடி விசாரணையில் இறங்கினார். அதில், இக்கொலையில் ஈடுபட்ட 9 சிறுவர்கள் உள்ளிட்ட 101 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், முறையாக விசாரணை நடத்தாத இன்ஸ்பெக்டர் ஆனந்த்ராவ் காலே, எஸ்ஐ சுதிர் கட்டாரே ஆகிய இருவரையும் சஸ்பெண்ட் செய்து எஸ்பி உத்தரவிட்டார். ஊரடங்கு அமலில் இருக்கும்போது, கொலையுண்ட 3 பேரும் எவ்வாறு காரில் இவ்வளவு தூரம் பயணித்து வந்தார்கள் என தனியாக விசாரிப்பதாக பால்கர் மாவட்ட கலெக்டர் கைலாஷ் ஷிண்டே கூறினார். இதனிடையே 3 பேர் கொலை குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்ரே உத்தரவிட்டுள்ளார். அதன் விசாரணை தற்போது தொடங்கியுள்ளது.