சென்னை: தெற்கு ரயில்வே சார்பில் இதுவரை மொத்தமாக 120.413 டன் மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் பல்வேறு இடங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை:
கொரோனா தடைகாலத்தில் தேவையான போக்குவரத்து தீர்வுகளை தெற்கு ரயில்வே வழங்கி வருகிறது. இதை கருத்தில் கொண்டு விரைவு பார்சல் ரயில்களை மீண்டும் அறிமுகம் செய்தது. இதற்காக 24 மணி ேநரமும் தொடர்பு கொள்ளும் வகையில் 90253 42449 என்ற தொடர்பு எண்ணும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்பு கொண்டு பொதுமக்கள் பார்சல் அனுப்பலாம்.
மேலும் இதுகுறித்த தகவல் www.sr.indianrailways.gov.in என்ற வலைதள பக்கத்திலும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சமூக வலைதளங்களான டிவிட்டர், பேஸ்புக் ஆகியவற்றிலும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதற்காக பிரத்யேக குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற காரணங்களால் இக்கோட்டத்தின் வாயிலாக மட்டும் 73.87 டன் மருந்துகள், 46.55 டன் மருத்துவ உபகரணங்கள் ஆகியவை அனுப்பப்பட்டுள்ளது. இதேபோல் நேற்று முன்தினம் நிலவரப்படி தெற்கு ரயில்வே சார்பில் மொத்தமாக 120.413 டன் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் பல்வேறு இடங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.