×

ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு பதிலாக போலீஸ் வேனில் பெண்ணுக்கு பிரசவம்: இக்கட்டான நிலையில் போலீசாருக்கு பாராட்டு

புதுடெல்லி: ஊரடங்குக்கு இடையே, ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு பதிலாக போலீஸ் வேனில் பெண்ணுக்கு பிரசவம் பார்க்கப்பட்டது. டெல்லியில், இக்கட்டான நிலையில் போலீசாரின் உதவியை பலரும் பாராட்டினர். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல் செய்யப்பட்டுள்ளதால் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளது. இந்நிலையில், மேற்கு டெல்லியைச் சேர்ந்த மினி குமார் என்ற பெண் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். அவருக்கு நேற்று முன்தினம் இரவு பிரசவ வலி ஏற்பட்டது. அவரும் அவரது குடும்பத்தினரும் அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு சென்று ஆம்புலன்ஸ் உதவி கோரினர்.

அங்கிருந்த பெண் போலீஸ் சுமன், உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அவசரநிலையை உணர்ந்த உயரதிகாரிகள், அந்தப் பெண்ணை போலீஸ் வேனில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல உத்தரவிட்டனர். இதன்படி கர்ப்பிணி மினிகுமார், போலீஸ் வேனில் கயாலாவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். வழியில் வேனிலேயே அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. உடன் சென்ற பெண் போலீசாரும், உறவினர்களும் சேர்ந்து மினி குமாருக்கு பிரசவம் பார்த்தனர். போலீசார் கொடுத்த தகவலின் பேரில் ஆம்புலன்ஸில் விரைந்து வந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மினி குமாருக்கும் குழந்தைக்கும் முதலுதவி வழங்கி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

தாயும் சேயும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து டெல்லி காவல் துணை ஆணையர் தீபக் புரோஹித் கூறுகையில், ‘கர்ப்பிணியின் குடும்பத்தினர் ஆம்புலன்ஸ் வாகன உதவி கோரி காவல் நிலையத்தை அணுகினர். அவர்களுக்காக எங்களது போலீஸ் வேனை அனுப்பினோம். மருத்துவமனையை நெருங்கும் வேளையில் அந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. இந்த இக்கட்டான நேரத்தில் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வோம்’ என்றார்.

Tags : birth ,police van , Police van, delivery to woman, praise for police
× RELATED பந்தலூரில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா