×

கொரோனா வைரஸை முற்றிலும் ஒழிக்க நாம் சமூக விலகலை 2022 வரை கடைப்பிடிக்க வேண்டும் : ஹார்வர்டு பல்கலை. ஆய்வறிக்கையில் தகவல்

வாஷிங்டன் : கொரோனா வைரஸை முற்றிலும் ஒழிக்க நாம் சமூக விலகலை 2022 வரை கடைப்பிடிக்க வேண்டும் என ஹார்வர்டு டி.எச் சான் பொதுச் சுகாதாரப் பள்ளி நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது.கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வுகான் நகரில் முதலில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதும் 210 நாடுகளை ஆட்டிப்படைத்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.26 லட்சத்தையும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்தையும் தாண்டியுள்ளது. கொரோனா வைரஸுக்கான  தடுப்பூசியை தயாரிக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மக்கள் அனைவரும் சமூக  இடைவெளியை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தி வருகிறது.இதை பின்பற்றாத நாடுகள் அதிக அளவில் உயிர் சேதத்தை எதிர்கொண்டுள்ளது. இருந்தாலும் இன்றளவும் ஒரு சிலர் ஊரடங்கையும், தனித்திருத்தலையும் பின்பற்றாமல் இருக்கின்றனர். இதற்கு பொருளாதாரம் மற்றும் உணவு தட்டுப்பாடும் கூட ஒரு காரணியாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ஹார்வர்டு டி.எச் சான் பொதுச் சுகாதாரப் பள்ளி கோவிட் 19 என்னும் கொரோனா வைரஸ் குறித்து ஆய்வு நடத்தியுள்ளது. இந்த ஆய்வு குறித்து சயின்ஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில்

கொரோனா வைரஸிற்கு முறையான சிகிச்சையோ, மருந்தோ கண்டுபிடிக்காத நிலையில், மக்கள் அனைவரும் 2022-ம் ஆண்டு வரை மக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தால் மட்டுமே கொரோனாவை ஒழிக்க முடியும்.இதற்கு முன்பு 2003ம் ஆண்டு பரவிய சார்ஸ் வைரஸ் கட்டுக்குள் கொண்டு வந்தும் சில கால இடைவெளிக்கு பிறகு மிக பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. அதுபோல கொரோனா வைரஸும் மீண்டு வர வாய்ப்புள்ளது. அப்படி ஏதேனும் நடந்தால் இப்போது நிகழும் உயிரிழப்பை விட அதிக உயிர்களை நாம் இழக்க நேரிடும்.கொரோனா வைரஸை முழுவதுமாக அழிக்க நாம் மருந்து கண்டுபிடிக்க வேண்டியது அவசியம்.

இல்லையேல், பிற வைரஸைப் போல ஒவ்வொரு குளிர்காலத்திலும் இது மீண்டும் வெளிப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.இதற்கு உதாரணமாக இப்பொழுது சீனாவில் மீண்டும் நூற்றுக்கணக்கானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருகின்றனர். எனவே கொரோனாவை அழிக்கும் மருந்து கண்டுபிடிக்கும் வரை சமூக விலகல் மட்டுமே இந்த வைரஸிலிருந்து மனித குலத்தைக் காக்கும்.அதுமட்டும் இல்லாமல் இப்போது கொரோனா வைரசால் அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கும் அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகள் இதைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.

இவ்வாறு ஹார்வர்டு டி.எச் சான் பொதுச் சுகாதாரப் பள்ளியின் ஆய்வு வலியுறுத்தி உள்ளது.

Tags : Harvard University , Corona, Virus, Social Distortion, 2022, Harvard, Univ., Thesis, Information
× RELATED ஹார்வர்டு பல்கலை.யில் ராகுல் பேச்சு...