லண்டன்: கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில், அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சனும் (55) வைரசால் பாதிக்கப்பட்டார். முதலில் அவர் வீட்டில் தனிமையில் இருந்தார். ஆனால், திடீரென அவரது உடல்நிலை மோசமடைந்ததால், லண்டனில் உள்ள செயின்ட் தாமஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு மூன்று நாட்கள் அவர் ஐசியூ.வில் இருந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் உடல்நலம் தேறியுள்ளார்.
இதையடுத்து, அவர் மருத்துவமனையில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தன்னுடைய உயிரை காப்பாற்றிய தேசிய சுகாதாரத்துறையினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக அவர் கூறினார். மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி, உடனடியாக போரிஸ் ஜான்சன் தன்னுடைய பொறுப்புகளை கவனிக்க மாட்டார் என்றும், தொடர்ந்து சில நாட்கள் ஓய்வில் இருப்பார் என்றும் பிரதமர் இல்லம் தெரிவித்துள்ளது.