திருச்சி: திருச்சியில் கொரோனா வைரசால் பாதித்த நபர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை, இந்தியாவில் கொரோனாவால் 273 பேர் உயிரிழந்துள்ளனர். 8.356 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தை பொருத்தவரை 11 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். 969 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட நாடு அல்லது வேறு மாநிலத்திலிருந்து திரும்பிய ஒரு நபர் அல்லது கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவருடன் இருந்தவர்கள் பிறருக்கு நோய் கிருமி பரவுவதை தடுக்க சமுதாயத்திலிருந்து தன்னை விலக்கி வீட்டில் தனி அறையில் தனிமைப்படுத்திக் கொண்டு சில வழிமுறைகளை கடைபிடிக்கவும், பொதுமக்களுக்கு தமிழகஅரசு வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் பல மாவட்டங்களில் கொரோனா பரிசோதனை மையம் அமைக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்ட நபர் சிகிச்சைக்கு ஒத்துழைக்க மறுப்பு தெரிவித்துள்ளார். இருப்பினும், தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில், மருத்துவர்கள் மீது கொரோனா பாதித்த நபர் எச்சில் துப்பி, முக கவசத்தை வீசியதாக புகார் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, மருத்துவர்களின் புகாரின் பேரில் கொரோனா பாதிக்கப்பட்ட நபர் மீது திருச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிகிச்சைக்கு ஒத்துழைக்க அறிவுறுத்தியுள்ளனர். போலீசார் வழக்குப்பதிவு செய்தாலும், தங்கள் உயிரை பணயம் வைத்து பணியாற்றி வரும் மருத்துவர் மீது நோயாளி செய்த காரியம் பல்வேறு தரப்பினர் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.