பெரம்பூர்: கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் வரும் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால், அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. ரயில், பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளன. அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகள் மட்டும் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தேநீர் கடைகள் சில இடங்களில் திறக்கப்பட்டது. இங்கு, பொதுமக்கள் கூட்டமாக திரண்டதால், தேநீர் கடைகளை மூட அதிகாரிகள் உத்தரவிட்டனர். தினக்கூலி தொழிலாளர்களுக்கு வேலை இல்லாததால், வருவாய் இன்றி தவித்து வரும் நிலையில், சென்னை திருவிக நகரில் உணவின்றி தவித்த 2 சிறுவர்கள் கொேரானா அச்சுறுத்தலை மீறி, சைக்கிளில் டீ விற்று வரும் சம்பவம் பார்ப்பவர்கள் மனதை உருக வைத்துள்ளது.
திருவிக நகர் பல்லவன் சாலையில் சிறுவர்களான அண்ணன், தங்கை இருவரும் ஊரடங்கை மீறி தினமும் சைக்கிளில் தேநீர் வியாபாரம் செய்து வருகின்றனர். சிறுவன் சைக்கிளை தேநீர் டிரம்மை வைத்து தள்ளிச் செல்ல, சிறுமி தேனீரை பிடித்து வியாபாரம் செய்கிறாள். இவர்களின் நலன் கருதி அரசு ஏதேனும் உதவி செய்ய வேண்டும், என இப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.