ஓசூர்: கொரோனா ருத்ரதாண்டவத்தால் விற்பனைக்கு அனுப்ப முடியாத நிலையில் ஓசூர் பகுதியில் மலர்களுடன் செடிகளை நிலத்திற்கு உரமாக்குவதற்காக உழவு ஓட்டும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏக்கர் கணக்கில் செண்டுமல்லி சாகுபடி செய்வது வழக்கம். இந்த மலர்களை திருமண விழாக்கள், கோயில் விழாக்கள், பண்டிகை நாள் என பல நிகழ்ச்சிகளுக்கு பொதுமக்கள் விரும்பி வாங்குகின்றனர். இப்பூக்கள் ஒரு வாரமானாலும் வாடாததால் பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பு உண்டு. ராம நவமியை முன்னிட்டு ஓசூர் தாலுகா பகுதியில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் செண்டுமல்லி பயிரிட்டிருந்தனர். சீசன் சமயத்தில் கொரோனா பாதிப்பால் பூக்கள் அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பூக்களுடன் செடிகளை மடித்து உழுது நிலங்களுக்கு உரமாக்கிடும் பணியில் தற்போது விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
இகுகுறித்து சாமனப்பள்ளி கிராம விவசாயிகள் கூறியதாவது: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கு மலர்களை அனுப்ப முடியவில்லை. உள்ளூர் மக்களும் பூக்களை வாங்க முன்வரவில்லை. எனவே பூக்களுடன் செடிகளை மடித்து தோட்டத்திலேயே ஏர் ஓட்டி அழித்து வருகிறோம். செண்டுமல்லி பயிரிட ஒன்றரை ஏக்கருக்கு ₹80 ஆயிரம் செலவாகிறது. 90 நாட்களில் பூக்கள் அறுவடைக்கு வரும். ராம நவமி விற்பனையை எதிர்நோக்கி காத்திருந்த நிலையில், கொரோனா பாதிப்பால் விற்பனைக்கு வழியின்றி அழிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். எனவே, தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்கி எங்களை காத்திட வேண்டும் என்றனர்.