புதுச்சேரி: புதுவை-தமிழகத்தை இணைக்கும் 49 சாலைகள் அதிரடியாக மூடப்பட்டுள்ளன. புதுவையில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் புதுவை எல்லை நுழை வாயில்கள் மூடப்பட்டுள்ளன. அத்தியாவசிய உணவு பொருட்களை ஏற்றி வரும் வாகனங்கள் மட்டும் புதுச்சேரிக்குள் அனுமதிக்கப்படுகிறது. இருப்பினும் புதுச்சேரி கிராமப்புற சாலைகள் வழியாக பிற மாநிலத்தவர் வந்து சென்றனர். இதையடுத்து புதுச்சேரியை ஒட்டியுள்ள தமிழக பகுதியான கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் சுகாதாரத்துறையின் வேண்டுகோளுக்கிணங்க புதுச்சேரிக்குள் நுழையும் 82 கிராம தமிழக சாலைகள் முழுவதுமாக மூடப்பட்டது.
இதன் அடுத்தகட்டமாக தமிழகத்துடன் தொடர்புடைய மேலும் 49 வழிகளை மூடுவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி புதுச்சேரி காவல் சரகத்திற்குட்பட்ட கிழக்கு பகுதியில் 4, வடக்கு 16, தெற்கு 7, மேற்கு 22 சாலைகள் என மொத்தம் 49 சாலைகள் நேற்று பேரிகார்டு, தடுப்பு அமைத்து அடைக்கப்பட்டுள்ளன. காலாப்பட்டு, மேட்டுப்பாளையம், கோரிமேடு, லாஸ்பேட்டை, பாகூர், கரையாம்புத்தூர், திருக்கனூர், வில்லியனூரை இணைக்கும் வழிகள் அடைக்கப்பட்டு அப்பகுதி மக்கள் பாதுகாப்புடன் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வழிகளில் பிற மாநிலத்தவர் புதுச்சேரிக்குள் நுழையக் கூடாது என மாவட்ட நிர்வாகம் தடை பிறப்பித்துள்ளது.