பந்தலூர்: பந்தலூர் அருகே தமிழ்நாடு அரசு தேயிலைத் தோட்டக்கழகம் டேன்டீ தொழிலாளர்கள் பணிக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பந்தலூர் சுற்றுவட்டாரம் பகுதியில் தமிழ்நாடு அரசு தேயிலைத்தோட்டக்கழகம் டேன்டீ செயல்பட்டு வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். கொரோனா வைரஸ் காய்ச்சல் நோய் தொற்று காரணமாக மத்திய மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் அமைப்புசாரா தொழிலாளர்கள், அன்றாட கூலிகள் என அனைத்து தரப்பினரும் வேலை இழந்து வீட்டில் இருந்து வருகின்றனர். அரசு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிப்பதாக அரசு அறிவித்துள்ளதால் டேன்டீ நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களும் அரசு அறிவித்துள்ள சம்பளத்தை எதிர்பார்த்து வீட்டில் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இப்பகுதியில் உள்ள சில தனியார் தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தோட்ட நிர்வாகம் கொரோனா காய்ச்சல் நோய் தடுப்பு விடுமுறை காலத்தில் தங்கள் விருப்பத்தின் பேரில் பணிக்கு வருகிறோம் தோட்ட நிர்வாகம் பொறுப்பு கிடையாது என்று விண்ணப்பத்தில் கையெழுத்து பெற்று பணியில் அமர்த்தி வருகின்றது. அதேபோல் டேன்டீ தொழிலாளர்களிடத்தில் விருப்ப விண்ணப்பம் கேட்டதால் தொழிலாளர்கள் வேலைக்கு வரமுடியாது என்று நிராகரித்து வந்தனர். இந்நிலையில் நேற்று டேன்டீ தோட்ட தொழிலாளர்களுக்கு முககவசம், சேனிடைசர் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் செய்து தரவேண்டும் அவ்வாறு பாதுகாப்பு கொடுத்தால் பணிக்கு செல்வதாக தெரிவித்து தேவாலா, பாண்டியார் உள்ளிட்ட பகுதி டேன்டீ தொழிலாளர்கள் பணிக்கு திரும்பினர்.
சேரங்கோடு டேன்டீ பகுதி தொழிலாளர்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் பணி தளத்தில் காத்திருந்து அதன்பின் பசுந்தேயிலை பறிக்கும் பணியில் தங்களை ஈடுபடுத்தியுள்ளனர். அதன்பின் சில மணிநேரத்தில் பணி புறக்கணிப்பு செய்துள்ளனர்.சேரம்பாடி, நெல்லியாளம் டேன்டீ தொழிலாளர்களும் பணிக்கு செல்லாமல் திரும்பியுள்ளனர். சம்பவ இடத்திற்கு ஆர்ஐ காமு சென்று டேன்டீ கள நடத்துனர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். தொழிலாளர்கள் அரசு உத்தரவு வந்தவுடன் பணிக்கு திருப்புவதாக கூறியுள்ளனர்.