டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1035 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7447-ஆக அதிகரித்துள்ள நிலையில் வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 239 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள் முடக்கத்தை மத்திய அரசு கடந்த மாதம் 25ம் தேதி அமல்படுத்தியது. இது, வரும் 14-ம் தேதியுடன் முடிகிறது. முடக்கத்தை அறிவித்து 16 நாட்கள் கடந்த நிலையில், கொரோனா பரவல் அதிகமாகி இருக்கிறதே தவிர, குறையவில்லை.
இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1035 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை அதிகாரி லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது; கொரோனாவிற்கு எதிராக போராடும் நிலையில் இந்தியா உள்ளது. மிகவும் தரப்படுத்தப்பட்ட அணுகுமுறையை மருத்துவர்கள் பின்பற்றி வருகின்றனர். நாட்டில் 586 கொரோனா பிரத்யேக மருத்துவமனைகள் மற்றும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள் உள்ளன. இந்தியாவில் ஊரடங்கு இல்லமால் இருந்திருந்தால், இதன் விளைவாக ஏப்ரல் 15 க்குள் 8.2 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பார்கள்.
அதனால் கொரோனாவிற்கு எதிராக இந்தியாவில் ஊரடங்கு நடவடிக்கை மிகவும் அவசியம் ஆகும். மத்திய அரசு முன்கூட்டியே நடவடிக்கை எடுத்ததால் மட்டுமே கொரோனா வைரஸ் பாதிப்பை அடையாளம் காணமுடிந்த்தது. நாடு முழுவதும்கொரோனா நோயாளிகளுக்கு ஒரு லட்சம் தனிமை படுக்கைகள் மற்றும் 11,500 ஐ.சி.யூ வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள் நாட்டில் பற்றாக்குறை இல்லை. இந்நிலையில் மகாராஷ்டிரா உட்பட அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பெரும்பான்மை மாநிலங்கள் முடக்கத்தை நீட்டிக்க மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. இதுதொடர்பாக பிரதமர் மோடி இன்று அறிவிப்பை வெளியிடுவார் என தகவல் தெரியவந்துள்ளது.