மாட்ரிட்: சில நாட்களாக தன்னைப் பற்றி சமூக ஊடகங்களில் வலம் வரும் செய்திகள் அனைத்தும்‘பொய்களின் பட்டியல்’ என்றும் ‘குப்பைகள்’ என்றும் அர்ஜனெடினா கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி நிராகரித்துள்ளார்.
அர்ஜென்டினாவில் புறப்பட்ட கால்பந்து புயல்தான் மெஸ்ஸி(33). தேசிய அணி, ஐரோப்பிய கால்பந்து கிளப்பான பார்சிலோனா அணியின் கேப்டனாக இருக்கிறார் மெஸ்ஸி. பிபா சிறந்த வீரர் விருதை 6முறை வென்ற ஒரே வீரர். அந்த விருதுக்கு அதிகபட்சமாக 12 முறை பரிந்துரைக்கப்பட்ட 2 வீரர்களில் ஒருவர். இவர் தனது 13வது வயது முதல் விளையாடி வரும் ஸ்பெயினின் பார்சிலோனா கிளப்பை விட்டு இத்தாலி நாட்டு மிலன் கிளப்புக்கு மாறப்போவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. பார்சிலோனா கிளப்புடனான அவரது ஒப்பந்தம் 2021ல் முடிவது குறிப்பிடத்தக்கது.
போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் பராகுவே நாட்டில் கைது செய்யப்பட்ட பிரேசில் வீரர் ரொனால்டினோ பிணையில் வெளிவர சுமார் 12.20 கோடி ஜாமீன் தொகை செலுத்தினர். இந்த தொகையை மெஸ்ஸிதான் தந்து உதவினார் என்று இன்னொரு தகவலும் வெளியாகி உள்ளது. இந்த 2 செய்திகளையும் குப்பைகள் என்று நிராகரித்த மெஸ்ஸி, இந்த செய்திகளை வெளியிட்ட விளையாட்டு செய்தி நிறுவனத்தையும் கடுமையாக கண்டித்துள்ளார். அர்ஜென்டினாவை சேர்ந்த நியுவெல்ஸ் ஓல்டு பாய்ஸ் கால்பந்து கிளப்பின் சிறுவர் அணிக்காக 1994 முதல் 2000ம் ஆண்டு வரை மெஸ்ஸி விளையாடி உள்ளார். சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பு, ‘ஓய்வு பெறுவதற்கு முன் நியுவெல்ஸ் கிளப்புக்காக மீண்டும் விளையாடுவேன்’ என்று கூறியிருந்தார். அதனை வைத்து ‘மெஸ்ஸி மீண்டும் அர்ஜென்டினா திரும்புகிறார். நியுவெல்ஸ் கிளப்புக்காக இனி விளையாடுவார்’ என்ற செய்தி அடிக்கடி இறக்கை கட்டி பறக்கும். அதையும் பலமுறை மெஸ்ஸி மறுத்துள்ளார்.