சென்னை: மருத்துவ உபகரணங்களை இனி எந்த மாநில அரசுகளும் கொள்முதல் செய்யக்கூடது என்று, மத்திய சுகாதாரத்துறை அதிரடியாக தடை விதித்துள்ளது. அனைத்து மாநில சுகாரத்துறை முதன்மை செயலாளர்களுக்கும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மருத்துவ உபகரணங்கள் வாங்குவது தொடர்பாக, அதிகாரமளிக்கப்பட்ட 3வது கூட்டம் நடைபெற்றது. இதில் மருத்துவ பாதுகாப்பு உபகரணங்களான முக கவசங்கள், கை உறைகள் மற்றும் வென்டிலேட்டர்கள் போன்றவற்றை தயாரிப்பது, கொள்முதல் செய்வது, ஏற்றுமதி, இறக்குமதி செய்வது தொடர்பாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதில், மருத்துவ பாதுகாப்பு உபகரணங்களாகிய என்95 முககவசங்கள் மற்றும் வென்டிலேட்டர்களை கொரோனா பாதுகாப்பிற்காக முன்கூட்டி வாங்கி கொள்கின்றனர்.
இதனால் சில மாநிலங்களுக்கு கிடைக்காத நிலை ஏற்படுகிறது. இதை கட்டுப்படுத்த, மாநில அரசு மற்றும் யூனியன் பிரதேசங்கள் மருத்துவ பாதுகாப்பு உபகரணங்களாகிய என் 95 முகக் கவசங்கள், வென்டிலேட்டர்கள் உள்ளிட்டவைகளை இனி கொள்முதல் செய்யக்கூடாது. இதனை மத்திய சுகாதாரத்துறையே கொள்முதல் செய்து, மாநிலங்களுக்கு பிரித்து கொடுக்கும். சில மாநிலங்கள் தேவைக்கு அதிகமான உபகரணங்களை கொள்முதல் செய்து, பயன்படுத்தாமல் வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும், பல மாநிலங்களில் வென்டிலேட்டர்கள் இயங்காத நிலையில் பழுதடைந்துள்ளது. அதனை மாநில சுகாதாரத்துறை சரி செய்து செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். இதேபோல், இவைகளை இயக்குவதற்கான ஆட்களை தேவையான அளவுக்கு வைத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு மாநில அரசுகளின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், கடந்த சில நாட்களுக்கு முன்பு மாநில அரசு கொள்முதல் செய்த பல மருத்துவ உபகரணங்களை வாங்க முடியாத நிலைக்கு மநில அரசுகள் தள்ளப்பட்டு என்ன செய்வதென்று தெரியாமல் உள்ளனர்.