மதுரை: கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக மதுரை மத்திய சிறைச்சாலையில் உள்ள கைதிகள் மூலம் முகக்கவசங்கள் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. தற்போது வரை இங்கு தயாரிக்கப்பட்ட 17 ஆயிரம் முகக்கவசங்கள் இலவசமாக பலருக்கும் விநியோகிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 9 மத்திய சிறைச் சாலைகள் உள்ளன. இதில் தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் என மொத்தமாக 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். சிறைக் கைதிகள் மூலம் பேவர் பிளாக், மர வேலைகள், உணவு பொருட்கள் உற்பத்தி, நர்சரி மற்றும் பல்வேறு தொழில்கள் நடந்து வருகின்றன. இதை சந்தைப்படுத்தி அதில் கிடைக்கும் வருமானத்தில் 40 சதவீதம் கூலியாக கைதிகளுக்கு பிரித்து கொடுக்கப்பட்டு வருகிறது.
தற்போது கொரோனா வைரஸ் தடுப்பு தொடர்பாக சிறைத்துறை டிஜிபியிடம் சிறப்பு அனுமதி பெறப்பட்டு, மதுரை சிறையில் ஆண் மற்றும் பெண் கைதிகள் மூலம் முகக் கவசங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து டிஐஜி பழனி கூறும்போது, ‘‘மதுரை மத்திய சிறையில் 1,500க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இவர்கள் உணவு பொருட்கள் தயாரிப்பு உட்பட பல்வேறு தொழில்கள் செய்து வருகின்றனர். தற்போது கூடுதலாக கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுக்கும் வகையில் கடந்த 23ம் தேதி முதல் முகக் கவசங்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஒரு லட்சம் முக கவசங்கள் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளோம். தற்போது வரை 34 ஆயிரம் முகக் கவசங்கள் தயார் செய்யப்பட்டு, அதில் 16 ஆயிரத்து 900 முகக் கவசங்கள் காவல் துறை, சுகாதாரத்துறை மற்றும் அரசின் பல்வேறு துறைகளுக்கும் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது’’ என்றார்.