சென்னை: வடஇந்திய மாநிலங்களில் இருந்து வரும் மளிகை பொருட்களை எந்த மாநில எல்லையிலும் தடுத்து நிறுத்தாமல் தமிழகம் வந்து சேர அனுமதிக்க வேண்டும் என்று அதிமுக சார்பில் பிரதமரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க 21 நாட்கள் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு குறித்து நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி நேற்று வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார். இதில், திமுக சார்பில் டி.ஆர்.பாலு எம்பி கலந்து கொண்டார். அதிமுக சார்பில் நவநீதகிருஷ்ணன் எம்.பி. பிரதமர் மோடியுடன் பேசினார்.
இந்த ஆலோசனை முடிவடைந்ததும், அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: முதல்வர் வேண்டுகோள்படி பிரதமரிடம் ஒரு கோரிக்கை வைத்தேன். தமிழகத்திற்கு வடஇந்திய மாநிலங்களில் இருந்துதான் மளிகை பொருட்கள் வருகிறது. இதை ஏற்றிக் கொண்டு வரும் லாரி, டிரக் போன்ற வாகனங்களை எந்த மாநில எல்லையிலும் தடுத்து நிறுத்தாமல் தமிழகம் வந்து சேர அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம்.