×

மும்பை தாராவியில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9-ஆக உயர்வு

மும்பை: ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான தாராவியில் கடந்த 1-ம் தேதி 56 வயது துணிக்கடைக்காரர் ஒருவருக்கு கொரோனா இருப்பது தெரியவந்தது. அன்று இரவு கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர் உயிரிழந்தார். இதையடுத்து துணிக்கடைக்காரர் வசித்து வந்த தாராவி பாலிகா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை மாநகராட்சி சீல் வைத்தது. அங்கு வசித்து வந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இந்தநிலையில் தாராவியில் துப்புரவு தொழிலில் ஈடுபட்டு வந்த ஒர்லியை சேர்ந்த மாநகராட்சி தொழிலாளிக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன்பிறகு தாராவி பாலிகா நகரில் துணிக்கடைக்காரர் வசித்து வந்த கட்டிடத்தை சேர்ந்த 30 வயது பெண்ணுக்கும், அபுதயா வங்கி அருகே உள்ள வைபவ் கட்டிடத்தில் வசித்து வரும் டாக்டர் ஒருவருக்கும், முகுந்த் நகரில் ஒரு நபர் மற்றும் மதினா நகரை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

பாலிகா நகரை சேர்ந்த 30 வயது பெண்ணின் 49 வயது அண்ணன், 80 வயது தந்தைக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது நேற்று உறுதியானது. இந்த நிலையில், தாராவியில் அமைந்துள்ள முகுந்த் குடிசைப்பகுதி மற்றும் தன்வாடா சாவ்ல் ஆகிய  இடங்களில் வசித்து வந்த இருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் தாராவியில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. மும்பை தாராவி பகுதியில் உள்ள பாலிகா நகர் ,வைபவ் குடியிருப்பு, முகுந்த் நகர், மைதினா நகர் ஆகிய 4 இடங்களும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடங்களில், சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கிருமி நாசினிகள் தெளித்து தூய்மை படுத்தி வருகின்றனர்.

Tags : deaths ,Tarawa ,Mumbai , Coronavirus, confirms, 2 more deaths,Tarawa, Mumbai
× RELATED மும்பையில் கடல் சீற்றமாக இருக்கும்;...