டெல்லி: உலகம் முழுவதும் பரவிய கொடிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை 149 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் 21 நாள் முடக்கப்படுவதாக கடந்த மாதம் 24ம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். இருப்பினும், கொரோனா வைரசின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பாஜக ஆளும் உத்தரபிரதேசம் உட்பட பல மாநில அரசுகள் மற்றும் வல்லுநர்களின் கோரிக்கையின்படி, நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கை வரும் 14ம் தேதிக்கு பிறகு நீட்டிக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதற்கிடையே, கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்த நாடாளுமன்ற லோக்சபா, ராஜ்யசபா என இரு சபைகளிலும் 5-க்கும் மேற்பட்ட எம்.பி.க்களை கொண்ட அரசியல் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில், நாடாளுமன்ற கட்சித் தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் ஆலோசனையில் ஈடுப்பட்டுள்ளார். ஆலோசனை கூட்டத்தில், தமிழகத்தில், திமுக சார்பில் அக்கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு வீட்டில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் பங்கேற்று உள்ளார். அதிமுக சார்பில் அக்கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் நவநீதகிருஷ்ணன் காணொலி காட்சி மூலம் பங்கேற்றுள்ளார்.