கொடைக்கானல்: கொடைக்கானல் அருகே பள்ளங்கி பகுதியில் தடை உத்தரவை மீறி பிக்னிக் சென்று கறி விருந்துடன் கொண்டாடிய வாலிபர்களுக்கு போலீசார் விரட்டியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே உள்ளது பள்ளங்கி மலைக்கிராமம். இந்த கிராமத்தை ஒட்டியுள்ள ஆற்றுப் பகுதியில் நேற்று நாயுடுபுரம் பகுதியைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பிக்னிக் சென்றனர். இந்த பகுதியில் இவர்கள் கறி சமைத்தனர். இதைப்பார்த்த இந்த பகுதி மக்கள் தடை உத்தரவை மீறி, இவர்கள் எப்படி இந்த பகுதிக்கு வந்தனர் என்று சந்தேகத்தின் அடிப்படையில் கொடைக்கானல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரித்ததில், அனைவரும் கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும், தடை உத்தரவால் பிக்னிக் வந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து இவர்களை லத்தியால் விரட்டியடித்த கொடைக்கானல் போலீசார், ஒழுங்காக வீடுகளுக்கு செல்ல வேண்டும். ஊரடங்கு நேரத்தில் வெளியே வரக்கூடாது என்று எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘‘இன்னும் நம் மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை. இளைஞர்கள் விழிப்புணர்வு இல்லாமல் இருப்பது வேதனை அளிக்கிறது’’ என்றனர்.