சென்னை: கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மக்களை பாதுகாத்துக்கொள்ள நாடு முழுவதும் இருபத்தோரு நாட்கள் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என காவல்துறையினர் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். அப்படி மீறி வருபவர்களுக்கு அபராதமும் பல்வேறு நூதன தண்டனைகளையும் அளித்து வருகின்றனர். அப்படியிருந்தும் சில இளைஞர்கள் இதை ஒரு விளையாட்டாக எடுத்து தொடர்ந்து போலீசுக்கு தண்ணி காட்டி வருகின்றனர். மேலும் போலீசார் வேலை செய்யும் விதம் அவர்கள் ஓடிப்போய் பிடிப்பது உள்ளிட்டவற்றை வீடியோவாக எடுத்து அதை மீம்ஸ் போட்டு கிண்டலடித்தும் வருகின்றனர். அந்த வகையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு புளியந்தோப்பு போலீசார் சாலைகளில் இளைஞர்களை துரத்தி செல்லும்போது அதை வீடியோவாக எடுத்து மீம்ஸ் போட்டு இணையத்தில் உலா விட்டனர்.
தொடர்ந்து புளியந்தோப்பு பகுதியில் இளைஞர்கள் கூட்டம் கூட்டமாக நின்று அரட்டை அடித்து வருவதாக போலீசாருக்கு தகவல் வந்தது .இதனையடுத்து நேற்று புளியந்தோப்பு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, எஸ். ஐ. அன்பழகன் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட போலீசார் புளியந்தோப்பு பகுதியில் கடுமையான வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் புளியந்தோப்பு. கன்னிகாபுரம், கேஎம் கார்டன், புளியந்தோப்பு ஹை ரோடு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித் திரிந்த சுமார் ஐம்பது இளைஞர்களை பிடித்து அதே இடத்தில் தோப்புக்கரணம் போட வைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்து வாகனங்களையும் பறிமுதல் செய்தனர் .இன்னும் சிலரை காவல் நிலையம் அழைத்து வந்து தோப்புக்கரணம் போட வைத்து அவர்களுக்கு முக கவசத்தையும் கை கழுவும் கிருமி நாசினியையும் கொடுத்தனுப்பினர். அவர்களிடமிருந்த வாகனங்களை பறிமுதல் செய்து வைத்துக்கொண்டனர்.