சென்னை: கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்களின் வீடுகளை சுற்றிலும் நேற்று முதல் 8 கிலோ மீட்டர் தொலைவு வரை தனிமைப்படுத்தல் மற்றும் நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மனநல ஆலோசகர்கள் நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் 277 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். மேலும் வெளிநாட்டிலிருந்து வந்த 15 ஆயிரத்துக்கு மேற்பட்டோரின் குடியுரிமை ஆணையத்தில் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் 85 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.
சென்னையில் மட்டும் 24 ஆயிரம் பேர் வீடுகளில் மாநகராட்சி சார்பில் டிக்கர் ஒட்டப்பட்டு கண்காணித்து வருகின்றனர். மேலும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை தொடர்பு கொண்டு அவர்களுக்கு தினம் அறிவுரை, ஆலோசனை வழங்குவதற்காக மனநல ஆலோசகர்கள் மாவட்ட தலைமையகங்களில் அமைக்கப்பட்டுள்ள அவசரகால உதவி மையங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்களின் வீடுகளைச் சுற்றிலும் உள்ள எட்டு கிலோ மீட்டர் தொலைவு வரை தனிமைப்படுத்துதல் மற்றும் நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் 50 வீடுகளுக்கு ஒரு நபர் என்ற வகையில் வீடு வீடாக சென்று நோய்தொற்று கண்டறியும் பணி மேற்கொள்ளப்படும். பணியாளர்களுக்கு ஒரு கண்காணிப்பு அலுவலர் பணிகளை ஒருங்கிணைத்து மேற்பார்வை செய்வர். இந்த குழுவினர் இருமல், காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் உள்ள நபர்களை கண்டறிந்து அந்த நபர் மருத்துவமனையில் பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுப்பதோடு வயதானவர்களின் விவரங்களையும் சேகரிப்பார்கள்.
மேலும் நோய் தொற்று அதிகமாக ஏற்படக்கூடும் என கருதப்படும் பிரிவினர் மீது தனிக்கவனம் செலுத்தப்படும். 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர், கர்ப்பிணிகள், நீரிழிவு மற்றும் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் தொடர் கண்காணிப்பில் கொண்டு வரப்படுவர்.