வேதாரண்யம்: கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க நீர்நிலைகளை பயன்படுத்த பொதுமக்களுக்கு தடை விதித்து வேதாரண்யம் நகராட்சி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. வேதாரண்யம் நகராட்சியின் சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கை நகராட்சி ஆணையர் பிரதான்பாபு, மேலாளர் மீராமன் சூர் உள்ளிட்ட பணியாளர்கள் தீவிரமாக எடுத்து வருகின்றனர். கிருமி நாசினி தெளித்தல், பொதுமக்கள் வீடுகளில் இருக்கச் சொல்லி அறிவுறுத்தல், அத்தியாவசிய தேவையான பொருட்களை வாங்குவதற்கு முககவசம் அணிந்து வரவேண்டும் எனவும் பல்வேறு அறிவுரைகளை பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் வேதாரண்யம் நகராட்சி பகுதியில் உள்ளஏரி, குளம், குட்டைகளில் பொதுமக்கள் யாரும் குளிக்கக் கூடாது என்று நீர் நிலைகளில் அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். வேதாரண்யம் நகராட்சி பகுதியில் பெரும்பாலான மக்கள் குளிக்கக்கூடிய நாகை சாலையில் உள்ள வேதாமிர்த ஏரி, விஸ்வநாதர் கோவில் படித்துறை ஆகிய இடங்களில் தடுப்பு கம்புகள் வைத்து கட்டப்பட்டு பொதுமக்கள் குளிக்கக்கூடாது என்று விளம்பர தட்டியும் நகராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ளது.