சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த நேற்று முதல் 31ம் தேதி தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு 1000 நிதியுதவி அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. குறிப்பாக நடைபாதை வியாபாரிகளுக்கு கூடுதலாக 1000 சேர்ந்து 2 ஆயிரம் நிதியுதவி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உதவித் தொகை தமிழகத்தில் உள்ள 1.26 லட்சம் வியாபாரிகளுக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக நகராட்சி நிர்வாக அதிகாரிகள் கூறியதாவது : தேசிய நகர்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சி மற்றும் 482 நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் சாலையோர வியாபாரிகளுக்கான நகர விற்பனை குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவில் உள்ள அனைவருக்கும் அடையாள அட்டையும் வழங்கப்பட்டது. தற்போது சென்னை மாநகராட்சியில் 23 ஆயிரத்து 135 நடைபாதை வியாபாரிகள் மற்றும் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் 1 லட்சத்து 3 ஆயிரத்து 49 நடைபாதை வியாபாரிகள் என்று மொத்தம் 1.26 லட்சம் நடைபாதை வியாபாரிகள் உள்ளனர். இதன்படி அனைவருக்கும் 2 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.