சென்னை: கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக கடந்த 19ம் தேதி முதல் திரைப்படம் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக திரைப்படத்துறையில் பணியாற்றும் தினக்கூலி பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தில் 25 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களில் 15 ஆயிரம் பேர் தினக்கூலி தொழிலாளர்கள். தற்போது இவர்கள் வேலை இன்றி தவித்து வருகிறார்கள். இதற்கு முன் பல போராட்டங்களை நடத்தி இதுபோன்ற சூழ்நிலையை அவர்கள் சந்தித்திருந்தாலும் அது அவர்களுக்கானது.
இது மக்களுக்கானது. பலர் நாங்களும், எங்கள் குடும்பமும் பட்டினியால் சாவதை விட கொரோனாவில் சாகிறோம் என்று சங்கத்தில் முறையிடுகிறார்கள். எனவே தொழிலாளர்களின் பசியை போக்கும் வகையில் 15 ஆயிரம் தொழிலாளர்கள் குடும்பத்திற்கு தலா ஒரு மூட்டை அரிசி வழங்க முடிவு செய்திருக்கிறோம். இதற்கு 2 கோடி வரை செலவாகும். கருணை உள்ளம் கொண்டவர்கள் தொழிலாளர்களுக்கு தாராள நிதி வழங்கி உதவ வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இந்த கோரிக்கையை ஏற்று நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் 10 லட்சம் ரூபாய் வழங்கினர்.