×

இன்று மாலை 6 மணி முதல் 31ம் தேதி வரை தமிழகத்தில் 144 தடை உத்தரவு: பஸ், டாக்ஸி, ஆட்டோ, லாரிகள் ஓடாது,.. அனைத்து மாவட்ட எல்லைகளுக்கும் சீல்

* பால், காய்கறி, மருந்து, மளிகை கடைகள் இயங்கும்
* கொரோனா பரவலை தடுக்க அதிரடி
* அத்தியாவசிய துறைகள் மற்றும் அலுவலக பணிகள் தவிர மற்ற
அரசு அலுவலகங்கள் செயல்படாது.
* விடுதிகள் மற்றும் பிற இடங்களில் தங்கியிருக்கும் பல்லாயிரக்கணக்கான பணியாளர்களின் நலன் கருதி, பார்சல் மூலம் மட்டும் உணவு வழங்கும் வகையில் உணவகங்கள் திறந்திருக்க அனுமதி.
* அம்மா உணவகங்கள் வழக்கம்போல செயல்படும்.

சென்னை: கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தமிழகத்தில் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று மாலை 6 மணி முதல் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தடையை முன்னிட்டு பஸ், டாக்ஸி, ஆட்டோ ஓடாது. பால், காய்கறி, மருந்து, மளிகை கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டிருக்கும். அத்தியாவசிய பணிகள் தவிர அரசு, தனியார் அலுவலகங்களும் மூடப்பட வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி உத்தரவிட்டுள்ளார்.  உலகம் முழுவதும் 185 நாடுகளுக்கும் மேல் கொரோனா வைரஸ் பரவி மிகவும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை 3.5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பலனின்றி 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர். இந்தியாவில் இதுவரை 8 பேர் பலியாகி உள்ளனர். தமிழகத்திலும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு 9 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் நாடு முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் (22ம் தேதி) காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வராமல் முழு ஒத்துழைப்பு அளித்தனர். ஆனாலும், நோய் தொற்று அதிகரிக்கலாம் என்ற அச்சம் காரணமாக பல்வேறு மாநிலத்தில் வருகிற 31ம் தேதி வரை ஊடரங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.  தமிழகத்தில், வருகிற 31ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள், மின்சார ரயில், மெட்ரோ ரயில், வெளியூர் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. கொரோனா வைரசால் தமிழகத்தில் ஒரு உயிரை கூட இழப்பதற்கு தயாராக இல்லை. அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றுகிறோம்.

இது மிகப்பெரிய நோய். சவாலாக எடுத்து தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக ரூ.500 கோடி நிதியை மாநில பேரிடர் நிதியில் இருந்து வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று  பேரவையில் அறிவித்தார். இந்நிலையில், கொரோனா வைரசை கட்டுப்படுத்த ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. இதுகுறித்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று சட்டப்பேரவையில் வெளியிட்டுள்ள அறிக்கை:

* கொரோனா வைரஸ் நோய் தொற்றை தடுக்க தமிழக அரசு, தொடர்ந்து தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் உள்ள 75 மாவட்டங்களில், தீவிர நோய் கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் சில வழிமுறைகளை மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது.
* மத்திய அரசால் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் உள்ள மாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு உள்பட தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும், போக்குவரத்து மற்றும் பொதுமக்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, தொற்று நோய்கள் சட்டத்தின்படி மாவட்ட எல்லைகளை மூட உத்தரவிடப்படுகிறது. இந்த உத்தரவு நாளை (24ம்தேதி) மாலை 6 மணி முதல் தொடங்கி 31.3.2020 வரை நடைமுறையில் இருக்கும்.
* இந்த அறிவிக்கையை தீவிரமாக அமல்படுத்த அனைத்து காவல் ஆணையர்களும், மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கும் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
* அத்தியாவசிய மற்றும் அவசர பணிகள் தவிர
மற்ற பொது போக்குவரத்து, தனியார் போக்குவரத்து, ஆட்டோ, டாக்ஸி போன்றவை இயங்காது. மாநிலங்களுக்கு இடையேயும், மாவட்டங்களுக்கு இடையேயும் ஆன போக்குவரத்து அத்தியாவசிய இயக்கத்திற்கு தவிர மற்ற இயக்கம் முற்றிலும் தடை செய்யப்படுகிறது.
* அத்தியாவசிய பொருட்களுக்கான, பால், காய்கறி, மளிகை, இறைச்சி, மீன் கடைகள் போன்றவை தவிர அனைத்து கடைகளும், வணிக வளாகங்களும், பணிமனைகளும் இயங்காது.
* அத்தியாவசிய துறைகள் மற்றும் அலுவலக பணிகள் தவிர மற்ற அரசு அலுவலகங்கள் செயல்படாது. அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் அரசு துறைகளான மாவட்ட நிர்வாகம், காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, சிறைத்துறை, பொது சுகாதாரம் மற்றும் மருத்துவ துறை, நீதிமன்றங்கள், உள்ளாட்சி அமைப்புகள் போன்றவை தொடர்ந்து இயங்கும். எனினும், தனிநபர் சுகாதார நடவடிக்கை உட்பட அனைத்து நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் அலுவலகங்களில் பின்பற்றப்பட வேண்டும்.
* தனியார் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப மற்றும் உயிர் தொழில்நுட்ப தொழில் அலுவலக பணியாளர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்ய வேண்டும். எனினும், அத்தியாவசிய பணிகளையும் மருத்துவம் உள்ளிட்ட பணிகளையும் மேற்கொள்ளும் தனியார் நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகள் தொடர்ந்து இயங்கும்.
* அத்தியாவசியமான பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலைகள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் குறைந்த பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.
* அத்தியாவசிய கட்டிட பணிகள் தவிர பிற கட்டிட பணிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. எனினும், இந்த நாட்களில் வேலைக்கு வராத தொழிலாளர்களுக்கு சம்பளம் நிறுத்தம் செய்யக் கூடாது.
* வீடுகளில் இல்லாமல், விடுதிகள் மற்றும் பிற இடங்களில் தங்கியிருக்கும் பல்லாயிரக்கணக்கான பணியாளர்களின் நலன் கருதி, பார்சல் மூலம் மட்டும் உணவு வழங்கும் வகையில் உணவகங்கள் திறந்திருக்க அனுமதிக்கப்படும். அம்மா உணவகங்கள் வழக்கம் போல செயல்படும்.
* வெளிநாடுகளில் இருந்து வந்துள்ளவர்கள் சுயமாகவே தங்களை தனிமைப்படுத்தி கொண்டு, நோய் அறிகுறி வருகிறதா என கண்காணித்து அரசு மருத்துவமனைகள் மூலமோ, அனுமதிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகள் மூலமோ மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டு, நோய் பாதிப்பு உறுதியானால் உரிய மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் நோய் தொற்று ஏற்படாத வண்ணம்
செயல்பட வேண்டும்.
* வெளிநாடு சென்று திரும்பிய நபர்களுடன் நேரடி தொடர்பு இல்லை என்றாலும் இந்நோய் தொற்றின் கடுமையை உணர்ந்து நோய் தொற்று ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளதை கருத்தில் கொண்டு, இந்த நோய்க்கான அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனையோ அல்லது அனுமதிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகள் மூலமோ மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
* தடை உத்தரவால், கர்ப்பிணி பெண்கள், முதியோர் ஆகியோருக்கு ஏற்படும் இடையூறுகளை அறிந்து, அவற்றை தணிக்க உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சி தலைவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
* இந்த தடை காலத்தில் அத்தியாவசிய பொருட்களான உணவு பொருட்கள், மருந்து பொருட்கள் போன்றவற்றின் போக்குவரத்துக்கும், விற்பனைக்கும் யாதொரு தடையும் இல்லை.
* நோய் தடுப்பு நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவது பற்றி அரசு பரிசீலித்து வருகிறது. இதற்கான ஆணைகள் தனியே வெளியிடப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu ,all ,county , India, Tamil Nadu, corona virus, 144 ban order, corona
× RELATED மோடியின் ஆட்சியில் எல்லா துறைகளும்...