சென்னை: ‘கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தனிமைப்படுத்திக்கொள்வதே ஒரே வழி’ என, தமிழக பேரிடர் நிர்வாகத்துறை ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறினார். இதுகுறித்து சென்னையில் பேரிடர் நிர்வாகத்துறை ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் இந்திய அரசும், தமிழக அரசும் தீவிரம் காட்டி வருகிறது. இன்று வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம். மேலும் இன்று மருத்துவமனைகளுக்கு தினசரி மருத்துவ பரிசோதனைக்காக சென்று நர்ஸ், டாக்டர்களின் நேரத்தை வீணடிக்க வேண்டாம். வாட்ஸ்அப், பேஸ்புக்கில் வரும் வதந்திகளை தடுக்க வேண்டும்.
கை கழுவுவதை கடைபிடிக்க வேண்டும். தொடர்ந்து இதை கடைபிடிக்க வேண்டும். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தனிமைப்படுத்திக்கொள்வதே ஒரே வழி.
சாலைகளில் கிருமி நாசினி கொண்டு தூய்மை படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்களிடம் இந்நோய் குறித்து விழிப்புணர்வு உள்ளது. கொரோனா குறித்து தேவையற்ற பதற்றம் வேண்டாம். அதேநேரத்தில் அலட்சியமாகவும் இருக்க வேண்டாம். சமூக வலைதளங்களில் வதந்தியை பரப்ப வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.