புதுடெல்லி: எதிர்க்கட்சிகள் பொய்யான தகவல்களை குறிப்பிடுவதாக பாஜ எம்பி கூறியதால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவையில் நேற்று, நாட்டில் நிலவும் வேலைவாய்ப்பு சூழல் குறித்த விவாதம் நடந்தது. அப்போது, பாஜ எம்பி ஜிவிஎல் நரசிம்மஹா ராவ் பேசுகையில்,” எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் , மிகப்பெரிய தலைப்பு செய்தியை தருவதற்காக வேலைவாய்ப் பின்மை பற்றி தவறான தகவல்களை தருகின்றனர். இது ஒரு, ‘ஷாகீன் பாக்’ புள்ளி விவரம்,’’ என்றார். இதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், உறுப்பினர்கள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் பேசினார்.
ஆனால், உறுப்பினர்கள் அமளியால் அவர் பேசியதை யாரும் பொருட்படுத்தவில்லை. இதனை தொடர்ந்து காங்கிரஸ், ஆம் ஆத்மி மற்றும் ராஷ்டிரிய ஜனதா தள உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து முழக்கமிட்டனர். அவையில் அமைதி காக்கும்படி அவை தலைவர் வெங்கையா நாயுடு அறிவுறுத்தியும், உறுப்பினர்கள் இயல்பு நிலைக்கு வராததால் அவை ஒத்திவைக்கப்பட்டது.