×

நிர்பயாவுக்கு இன்று நீதி கிடைத்துள்ளது, இந்த நாள் தேசத்தின் அனைத்து மகள்களுக்கு சமர்ப்பணம் - நிர்பயா தாயார் கண்ணீர் மல்க பேட்டி

புதுடெல்லி: நிர்பயாவுக்கு இன்று நீதி கிடைத்துள்ளது, இந்த நாள் தேசத்தின் அனைத்து மகள்களுக்கு சமர்ப்பணம் என்று நிர்பயாவின் தாய் ஆஷா தேவி கண்ணீர் மல்க பேட்டியளித்துள்ளார். என் மகள் திரும்பி வரப்போவது  இல்லை, ஆனால் தேசத்தில் உள்ள அனைத்து மகள்களுக்காகவும் எனது போராட்டம் தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த போராட்டம் அனைத்து பெண்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் என்றும், குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கிய நீதித்துறைக்கும், அரசுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார். நிர்பயாவிற்கு நீதி தாமதிக்கப்பட்டது, ஆனால் மறுக்கப்படவில்லை என்று நிர்பயாவின் தாய் ஆஷா தேவி கண்ணீர் மல்க பேட்டியளித்துள்ளார்.  

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு, டிசம்பர் 16-ந் தேதி இரவில் 23 வயதான மருத்துவ மாணவி நிர்பயா பேருந்தில் சென்றபோது, வெறி பிடித்த ஒரு கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்து சிதைக்கப்பட்டு, நடு ரோட்டில் வீசப்பட்டார். அவருடன் சென்ற அவரது நண்பரும் கடுமையாக தாக்கப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அந்த மாணவி, சிங்கப்பூருக்கு உயர் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள மவுண்ட் எலிசபெத் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆனாலும் சிகிச்சை பலனின்றி 13 நாட்கள் கழித்து டிசம்பர் 29-ம் தேதி உயிரிழந்தார். இந்த கொடிய சம்பவம், நாட்டையே உலுக்கியது.

இதில் குற்றவாளிகளுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்களும் நடத்தப்பட்டன. இந்த கொடிய சம்பவத்தில், கொலை மற்றும் கற்பழிப்பு உள்ளிட்ட பிரிவுகளில் டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து ராம்சிங், முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்‌ஷய் தாக்குர் மற்றும் ஒரு இளம் குற்றவாளி என 6 பேரை கைது செய்தனர். இவர்களில் ராம்சிங், திகார் சிறையில் 2013-ம் ஆண்டு, மார்ச் மாதம் 11-ந் தேதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ‘நிர்பயா’ வழக்கை விரைவு கோர்ட்டு துரிதமாக விசாரித்தது. இளம் குற்றவாளிக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, அவர் சீர்திருத்த சிறையில் அடைக்கப்பட்டார்.

முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்‌ஷய் தாக்குர் ஆகிய 4 பேருக்கு மரண தண்டனை விதித்து 2013-ம் ஆண்டு செப்டம்பரில் விரைவு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை டெல்லி ஐகோர்ட்டு 2014-ம் ஆண்டும், சுப்ரீம் கோர்ட்டு 2017-ம் ஆண்டும் உறுதி செய்தன. அதன்பின்னர் 4 பேரின் சீராய்வு மனுக்களையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து, தண்டனையை உறுதி செய்தது. இந்த நிலையில் தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி குற்றவாளிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனுக்கள் அனைத்தையும் நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்து வந்தது. மேலும், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் கொடுக்கப்பட்ட கருணை மனுக்களும் நிராகரிக்கப்பட்டது. தூக்கு தண்டனையில் இருந்து தப்பிக்க குற்றவாளிகள் பல்வேறு முயற்சிகளை செய்து வந்த நிலையில்  நிர்பயா கொலை குற்றவாளிகள் 4 பேருக்கும் அதிகாலை 5.30 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.


Tags : submission ,daughters , Nirbhaya case, execution, Nirbhaya mother,
× RELATED விஷக்கிழங்கு சாப்பிட்ட தொழிலாளி சாவு