திருப்புவனம்: கீழடியில் மீண்டும் ஒரு செங்கல் கட்டுமானம் கண்டறியப்பட்டுள்ளது பார்வையாளர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் 5ம் கட்ட தமிழக தொல்லியல் அகழாய்வின்போது, நீதியம்மாள் என்பவரின் நிலத்தில் மிக நீண்ட தரைத்தளம் கண்டறியப்பட்டது. பிப்.19ம் தேதி தொடங்கப்பட்ட 6ம் கட்ட அகழாய்வின்போது அந்த தரைத்தளத்தின் தொடர்ச்சியும் கண்டறியப்பட்டது. தற்போது நீதியம்மாள் நிலத்தில் 3 குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலத்தின் மறு பகுதியில் பாசன தேவைக்காக பிளாஸ்டிக் குழாய் பதிக்கும் பணி நேற்று முதல் நடந்து வருகிறது.
இதில் அகழாய்வு பணி நடந்து வரும் இடத்திலிருந்த 100 மீட்டர் தொலைவில், தென்பகுதியில் தண்ணீர் கொண்டு செல்ல பைப் பதிப்பதற்காக பள்ளம் தோண்டியபோது 2 அடி ஆழத்தில் தரைத்தளம் தென்பட்டுள்ளது. பள்ளத்தின் இருபுறமும் செங்கல் சுவர்கள் இருந்தன. தொடர்ச்சியாக தோண்டும்போது, சிறிய குழவி கல்லின் ஒரு பகுதி மட்டும் கிடைத்துள்ளது. இங்கு மிக நீண்ட தரைத்தளம் கிடைத்திருப்பது தொல்லியல் அலுவலர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது. தமிழக தொல்லியல் துறை அலுவலர்கள் மேலும் தோண்ட வேண்டாம் என கேட்டுக் கொண்டதால் அப்படியே விட்டு வைத்துள்ளனர். அப்பகுதியினர் கூறுகையில், ‘‘அகழாய்வு பணிகளை விரைவுபடுத்தினால் முழு அளவிலான நகரம் கிடைக்க வாய்ப்புள்ளது’’ என்றனர்.