×

பைக் மீது பஸ் மோதல்; கம்பெனி ஊழியர் பலி: பஸ் கண்ணாடி உடைப்பு ,..சாலை மறியல்

ஆவடி: ஆவடி, சி.டி.எச் சாலையில் பைக் மீது பஸ் மோதியதில் தனியார் கம்பெனி ஊழியர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதனை கண்டித்து பொதுமக்கள் பஸ்சை சிறைபிடித்து கண்ணாடியை அடித்து உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.  ஆவடி, காமராஜர் நகர், அன்பு தெருவில் வசித்து வந்தவர் சிவராமன் (27). அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் கம்பெனியில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவரது சொந்த ஊர் திருவண்ணாமலை.   சிவராமன் நேற்றுமுன்தினம் இரவு சுமார் 10 மணியளவில் வேலை முடிந்து கம்பெனியில் இருந்து பைக்கில் வீட்டுக்கு புறப்பட்டார். இவர், ஆவடி சி.டி.எச் சாலை, தனியார் பள்ளிக்கூடம் எதிரே பைக்கில் வந்து கொண்டிருந்தார். அப்போது, பின்னால் செங்குன்றத்தில் இருந்து பூந்தமல்லி நோக்கி சென்ற  மாநகர பஸ் பைக் மீது மோதியது.

 இந்த விபத்தில் சிவராமன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே  இறந்தார். இதனை பார்த்த அப்பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், அவர்களில் சிலர் கற்களை எடுத்து பஸ் கண்ணாடி அனைத்தையும் அடித்து உடைத்தனர்.  இதனை பார்த்த டிரைவர், கண்டக்டர் இருவரும் அச்சத்தில் பஸ்சை நடுரோட்டிலேயே நிறுத்தி விட்டு தப்பி ஓடினர்.  இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால், சி.டி.எச் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த ஆவடி போலீஸ் உதவி கமிஷனர் சத்தியமூர்த்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர், போராட்டம் நடத்திய பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது பொதுமக்கள் விபத்துக்கு காரணமான ஓட்டுநர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என  வலியுறுத்தினர். அவர்களிடம் நடவடிக்கை எடுப்பதாகக் கூறி சமரசம் செய்தனர். அதன்பிறகு, போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், புகாரின் அடிப்படையில்  பூந்தமல்லி போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவுசெய்து  ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்த மாநகர பஸ் டிரைவர் ஸ்டீபன் (45) என்பவரை கைது செய்தனர். பைக் மீது அரசு பஸ் மோதி கம்பெனி ஊழியர் இறந்ததை கண்டித்து பொதுமக்கள் நடத்திய போராட்டம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.



Tags : Company Employee Kills: Bus Glass Break , Bike, Bus, Accident, Company Employee Kills, Bus Glass Break
× RELATED சென்னையில் 5 வயது சிறுமியை நாய்கள்...