சென்னை: பூந்தமல்லி கோரன்டைன் வார்டில் உள்ள 3 பேர், 14 நாட்கள் கண்காணிப்பில் இருப்பார்கள் என்று துணை இயக்குனர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில் சீனா, இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் படிப்பு, வேலை, சுற்றுலா சென்றவர்கள் அங்கிருந்து தினந்தோறும் விமானம் மூலம் சென்னை வருகின்றனர். அவ்வாறு வருபவர்களில் சற்று பாதிப்புக்குள்ளானவர்கள் பூந்தமல்லி அரசு பொது சுகாதார நிறுவனத்தில் உள்ள கோரன்டைன் வார்டில் தங்க வைக்கப்பட்டு 24 மணி நேரமும் 6 மணி நேரத்திற்கு ஒருமுறை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தனர்.
பின்னர், அவர்கள் வீடுகளில் தனிமையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து அறிவுறுத்தி அனுப்பி வைக்கப்படுகின்றனர். பூந்தமல்லி கோரன்டைன் வார்டில் கடந்த 15ம் தேதி முதல் நேற்று வரை 96 பேர் வரவழைக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு அதில் 93 பேர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தற்போது, இந்த தனி சிறப்பு முகாமில் வயதான மூன்று பேர் மட்டுமே உள்ளனர். அவர்கள் சுமார் 14 நாட்கள் தீவிர கண்காணிப்பில் இருப்பார்கள் என்றும் அதன்பிறகு அவர்களுக்கு கொரோனா தொற்று அறிகுறி உள்ளதா என்பதை ஆய்வு செய்த பிறகு சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் எனவும் பொது சுகாதாரத் துறை துணை இயக்குனர் பிரபாகரன் தெரிவித்தார். மேலும் இங்கு சிலர் பரிசோதனைக்கு வருவதற்கு வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.